துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்க குடிபோதையில் வந்த பெண் விமானியால் பரபரப்பு


துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்க குடிபோதையில் வந்த பெண் விமானியால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2018 9:45 PM GMT (Updated: 18 Jan 2018 9:44 PM GMT)

மங்களூருவில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்குவதற்காக பெண் விமானி குடிபோதையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களூரு,

மங்களூருவில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்குவதற்காக பெண் விமானி குடிபோதையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மாற்று விமானி மூலம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

குடிபோதையில் வந்த பெண் விமானி

கர்நாடக மாநிலம் மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நள்ளிரவு 12 மணி அளவில் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு 180 பயணிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தை இயக்குவதற்காக துருக்கி நாட்டை சேர்ந்த பெண் விமானி ஒருவர் வந்தார்.

அவர் தள்ளாடியப்படி வந்ததால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி, மருத்துவ பரிசோதனை செய்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த மருத்துவ பரிசோதனையில், அந்த பெண் விமானி மது அருந்தி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர், குடிபோதையில் விமானத்தை இயக்க வந்ததும் தெரியவந்தது.

மாற்று விமானி மூலம்...


இதையடுத்து அவர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே, விமானம் புறப்பட தாமதம் ஆனதால், அதில் இருந்த பயணிகள் மிகுந்த குழப்பமடைந்தனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக இயக்கப்படும் என்று பயணிகளிடம் தெரிவித்தனர். ஆனாலும், என்ன காரணம் என்று அதிகாரிகள், பயணிகளிடம் சரியாக தெரிவிக்கவில்லை. இதையடுத்து மாற்று விமானி அங்கு வரவழைக்கப்பட்டார். அந்த மாற்று விமானி மூலம் விமானத்தை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி அளவில் அந்த விமானம் மங்களூருவில் இருந்து புறப்பட்டு துபாய் நோக்கி பறந்தது. சுமார் 6 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

விசாரணை

துபாய் செல்ல இருந்த விமானத்தை இயக்க வந்த பெண் விமானி, குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், துருக்கி நாட்டை சேர்ந்த பெண் விமானி, குடி பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். அவர் துபாய் செல்ல இருந்த விமானத்தை குடிபோதையில் இயக்க வந்துள்ள தகவலை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதிர்ஷ்டவசமாக அவர் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக தான் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என்று தகவல் தெரிவித்தோம். இதுதொடர்பாக அந்த பெண் விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த சம்பவத்தால் மங்களூரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story