பண்ருட்டி அருகே கணவன்-மனைவி சண்டையை விலக்கிவிட்ட தொழிலாளி படுகொலை


பண்ருட்டி அருகே கணவன்-மனைவி சண்டையை விலக்கிவிட்ட தொழிலாளி படுகொலை
x
தினத்தந்தி 19 Jan 2018 10:45 PM GMT (Updated: 19 Jan 2018 11:59 PM GMT)

கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட்ட தொழிலாளி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கத்திக்குத்து விழுந்ததில் மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூரை சேர்ந்தவர் பெரியண்ணன்(வயது 40). தே.மு.தி.க. பிரமுகர். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி(40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெரியண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று இரவு 9 மணிக்கு பெரியண்ணன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை கண்டித்ததால் பாக்கியலட்சுமிக்கும், பெரியண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பெரியண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாக்கியலட்சுமியின் நெஞ்சில் குத்தினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீடுகளை சேர்ந்த தொழிலாளி ஏழுமலை(45), ராமதாஸ் மகன் ராஜசேகர்(27), அண்ணாமலை மனைவி வெண்ணிலா(31) ஆகியோர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட்டு, பாக்கியலட்சுமியை மீட்க முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெரியண்ணன், தான் வைத்திருந்த கத்தியால் அவர்களையும் குத்தினார். இதில் ஏழுமலையின் கழுத்தில் குத்து விழுந்ததில், நிலைகுலைந்து கீழே விழுந்தார். மற்றவர்களுக்கு நெஞ்சில் கத்திக்குத்து விழுந்தது.

இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனே பெரியண்ணன், தான் வைத்திருந்த கத்தியை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை கிராம மக்கள் துரத்துச்சென்று பிடித்தனர். பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெரியண்ணனை போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story