மண்பாண்ட தொழிலை காப்போம்


மண்பாண்ட தொழிலை காப்போம்
x
தினத்தந்தி 20 Jan 2018 5:45 AM GMT (Updated: 20 Jan 2018 5:35 AM GMT)

மாறி வரும் நவீன உலகில் கைத்தொழில்கள் எல்லாம் ‘கை’ கொடுக்காத தொழில்களாகவே உள்ளன. எந்திரமயமாதலின் தாக்கம் அதிகரித்த போதும், நவீன எந்திரங்கள் எதுவும் புகுந்துவிடாத தொழிலாக மண்பாண்ட தொழில் திகழ்கிறது.

 மண் பாண்டங்களின் பயன்கள் குறித்தும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்ட போதிலும், அதன் பயன்பாடு மிகக்குறைவாகவே இருக்கிறது.

கலாசாரம், பண்பாடு சார்ந்து கொண்டாடப்படும் பண்டிகையான தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கம், கிராமம் முதல் நகரம் முழுவதும் இருந்தது. அதுவும் தற்போது மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. தற்போது, சில்வர், வெண்கலம் போன்ற பாத்திரங்களில் பொங்கல் வைக்கிறார்கள். ஒவ்வொரு பண்டிகைகளையும் அர்த்தமுள்ளதாகவே நமது முன்னோர்கள் உருவாக்கி தந்தனர். அப்படித்தான், இயற்கையை போற்றுவது, கால்நடைகளை கொண்டாடுவது, உழைப்பின் மேன்மையை உணர்த்துவது என்ற வகையில் கொண்டாடப்படும் பொங்கல் நாளில் நமது மரபை காக்கும் வகையில் மண்பாண்டங்களையே பயன்படுத்தி வந்தனர்.

தற்போது மண்பானைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டதாலும், போதிய வருமானம் இல்லாததாலும், சமூக அந்தஸ்து கிடைக்காததாலும் மண்பாண்ட தொழில் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து வருகிறது. தமிழ் கலாசாரத்தின் மண் சிற்பிகளாய், மண்ணுக்கு உருவம் கொடுக்கும் படைப்பாளிகளாய் திகழும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை இன்றைக்கு கலை இழந்து காணப்படுகிறது. மெல்ல, மெல்ல நலிந்து வரும் மண்பாண்ட தொழிலுக்கு அரசும், பொதுமக்களும் நேச கரம் நீட்ட வேண்டும். அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவது நமது கடமை.

-ராஜ கோவிந்தராஜ், கறம்பக்குடி

Next Story