ஒசநகர் அருகே கிணற்றை தூர்வாரும் போது திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் குண்டுகள் கிடைத்தன


ஒசநகர் அருகே கிணற்றை தூர்வாரும் போது திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் குண்டுகள் கிடைத்தன
x
தினத்தந்தி 20 Jan 2018 10:15 PM GMT (Updated: 20 Jan 2018 10:03 PM GMT)

ஒசநகர் அருகே கிணற்றை தூர்வாரும் போது திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் குண்டுகள் கிடைத்துள்ளன.

பெங்களூரு,

ஒசநகர் அருகே கிணற்றை தூர்வாரும் போது திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் குண்டுகள் கிடைத்துள்ளன. அந்த ராக்கெட் குண்டுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ராக்கெட் குண்டுகள் கிடைத்தன


சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா நாகரா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ ராவ். விவசாயி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதன்படி அவர் தனது கிணற்றை தூர்வாரினார். அப்போது அந்த கிணற்றில் இருந்து இரும்பால் ஆன பழங்காலத்து ராக்கெட் குண்டுகள் கிடைத்தன. இதுகுறித்து அவர் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சிவமொக்கா சிவப்ப நாயக்கா அரண்மனையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரும், உதவி இயக்குனருமான சஜிஸ்வரா நாயக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் கிடந்தன. அந்த ராக்கெட் குண்டுகளை கைப்பற்றிய அவர், அவற்றை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

திப்பு சுல்தான் பயன்படுத்தியது

இந்த ராக்கெட் குண்டுகள் ஹைதர் அலி, ‘மைசூரு புலி’ திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தான் பயன்படுத்தப்பட்டவையாகும். அதற்கு முன்பு வரை நடந்த போர்களில், மூங்கில் கம்புகளால் செய்யப்பட்ட ராக்கெட்டுகளில் பேப்பர் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உருளையில் வெடிப்பொருட்களை திணித்து எதிரிகளை நோக்கி வீசுவார்கள். ஆனால், ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் தான் இரும்பால் ஆன ராக்கெட் குண்டுகள் தயாரிக்கப்பட்டது. அதாவது, மூங்கில் கம்புகளில் இரும்பு உருளையால் ராக்கெட் செய்யப்பட்டது.

திப்பு சுல்தான் காலத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் குண்டுகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளை தாக்கும் சக்தி கொண்டது. திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் நாகரா கிராமத்தில் நாணயம் தயாரிக்கும் இடம், ஆயுத கிடங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நாணயம் தயாரிக்கும் இடம் மற்றும் ஆயுத கிடங்கு 1763-ம் ஆண்டு முதல் 1799-ம் ஆண்டு வரை செயல்பட்டது. நாகரா கிராமத்தில் தற்போது கிடைத்துள்ள ராக்கெட் குண்டுகள் திப்பு சுல்தான் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

ஆய்வு

இந்த ராக்கெட் குண்டுகள் பெரும்பாலானவை 7 முதல் 8 ‘இன்ச்’ இருக்கும். ஒருசில ராக்கெட் குண்டுகள் தான் அதனைவிட நீளமாக இருந்தது. அந்த ராக்கெட் குண்டுகளை தற்போது தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story