திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2018 10:00 PM GMT (Updated: 21 Jan 2018 9:56 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டார்.

பெங்களூரு,

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருமணத்திற்கு மறுப்பு


பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 23 வயது இளம்பெண் தங்கி இருக்கிறார். அவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவருக்கும், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் தினேஷ் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக தினேஷ் கூறினார்.

இதனால் தினேசுடன் பல்வேறு இடங்களுக்கு இளம்பெண் சுற்றுலா சென்றார். இந்த நிலையில், இளம்பெண்ணுடன் பேசுவதை திடீரென்று தினேஷ் நிறுத்தி விட்டதுடன், அவரை திருமணம் செய்யவும் மறுத்து விட்டார். அதே நேரத்தில் தினேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.

இளம்பெண் கற்பழிப்பு

உடனே அவர், தினேசை சந்தித்து தன்னை திருமணம் செய்யும்படி கூறியுள்ளார். முதலில் அவர் மறுத்து விட்டார். பின்னர் தன்னுடன் குடகு மாவட்டம் மடிகேரிக்கு வரும்படி இளம்பெண்ணை தினேஷ் அழைத்துள்ளார். உடனே அவரும் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை தினேஷ் கற்பழித்ததாக கூறப்படுகிறது. அதனை அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததுடன், அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவதாகவும், இளம்பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய தினேஷ் மறுப்பதாகவும் கூறி எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தினேசை தேடிவருகிறார்கள். மேலும் இளம்பெண் மடிகேரியில் வைத்து கற்பழிக்கப்பட்டு இருப்பதால்,

இந்த வழக்கை மடிகேரி போலீசுக்கு மாற்ற எச்.ஏ.எல். போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Next Story