2020-ல் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய திறன் மாற்றங்கள்


2020-ல் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய திறன் மாற்றங்கள்
x
தினத்தந்தி 22 Jan 2018 8:08 AM GMT (Updated: 22 Jan 2018 8:08 AM GMT)

கால மாற்றத்திற்கேற்ப திறன்களை வளர்த்துக் கொண்டவர்களே கால வெள்ளத்தில் கரைந்துபோகாமல் நிற்பார்கள்.

நாளைய எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் மாணவர்களும் தொலைநோக்கு சிந்தனையோடு திறன்களை மெருகேற்ற வேண்டும். இந்தத் திறன் மாற்றங்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் மட்டுமே கைகொடுக்கும். கடந்த 2015-ல் திறம்பட திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களே இன்றைய காலத்தில் சிறந்தவர்களாக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே திறமைகள் இனி வரும் ஆண்டுகளிலும் கைகொடுக்குமா? என்பது சந்தேகமே. 2020-ம் ஆண்டில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய திறன் மாற்றங்கள் எவை என்பது பற்றிய சிறு அலசல்...

தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே புதுமாதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு உலகமும் இந்த மாற்றத்தால் ரொம்பவே மாறியிருக்கிறது. பல புதுமையான வேலைகள் உருவாகி இருப்பதோடு, பழைய வேலைகளும் தொழில்நுட்பத்தால் புதுமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. புதுமையான பணிகளுக்கு புதுமைத்திறன்களும் அவசியமல்லவா?

தொழில்நுட்ப வளர்ச்சியால் பள்ளிகளும் மாற்றம் கண்டு வருகின்றன என்பது உண்மைதானே? அதன் கண்கூடான எடுத்துக்காட்டாக ஸ்மார்ட் கிளாஸ்கள் பெருகி வருவதைக் கூறலாம். இன்டர்நெட் பயிற்சி வகுப்புகளும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஆன்லைன் பாடங்களும் மேலைநாடுகளில் அதிவேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களான நீங்கள் விரைவிலேயே ரோபோ ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுவீர்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த காலமாற்றங்கள் ஆண்-பெண் பேதத்தையும் வேகமாக துரத்திக் கொண்டிருக்கிறது. இங்கே பெண்கள், ஆண்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது. எனவே பாலின வேற்றுமைகளை கடந்து பழகவும், செயலாற்றவும் உங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டியது முதன்மையான திறனாகும்.

2015-ம் ஆண்டில் ஒருதுறையில் சிறந்து விளங்க மாணவர்கள், வேலைதேடுபவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்களாக பட்டியலிடப்பட்டவை இவைதான். 1. சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன், 2. ஒருங்கிணைந்து செயல்படும் திறன், 3. மக்களை கையாளும் திறன், 4. விமர்சன திறன், 5. பேச்சுவார்த்தை திறன், 6. தர கட்டுப்பாட்டுத் திறன், 7. சேவைத் திறன், 8. தீர்மானித்தல் மற்றும் முடிவெடுத்தல் திறன், 9. நடப்பை புரிதல் திறன், 10. புதுமை உருவாக்கும் திறன்கள்.

2020-ல் இந்தத் திறன்களில் பல முக்கியத்துவம் இழக்கின்றன. புதுமையான திறன்கள் பல காலமாற்றத்திற்கேற்ப தேவைப்படுகிறது. ஒருவர் 2020-ல் முன்னிலை பெற பெற்றிருக்க வேண்டிய திறன்களாக நிபுணர்கள் பட்டியலிடுபவை...

1. தொடர் சிக்கல்களை எதிர்கொள்ளுதல், 2. விமர்சன திறன், 3. புதுமை படைக்கும் திறன், 4. மக்களை கையாளுதல், 5. ஒருங்கிணைந்து செயல்படுதல், 6. உணர்ச்சி சார் நுண்ணறிவு, 7. தீர் மானித்தல் மற்றும் முடிவெடுத்தல் திறன், 8. சேவை நோக்குநிலை திறன், 9. பேசும் திறன், 10. அறிவாற்றல் நெகிழ்வுத் திறன்.

இவற்றில் பல திறன்கள் ஏற்கனவே உங்களிடம் இருக்கும். இன்னும் சில திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அனேகமாக அனைத்துத் திறன்களையுமே பயிற்சியாளர் துணையின்றி வளர்த்துக் கொள்ளக்கூடியதுதான். பயிற்சியும், செயல்திறனும், அனுபவமும் இந்த திறன்களை உங்களுக்கு வழங்கிவிடும்.

இனி இந்த திறன்களைப் பற்றிய சுருக்கமான விளக்கங்களை அறிவோம்...

சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் தலைமைப் பண்புக்கான முக்கியத் திறனாக இருக்கிறது. எதிர்காலத்திலும் அது முக்கியமானதாக, முதன்மையானதாகவே இருக்கப் போகிறது. எனவே உங்கள் துறை சார்ந்த அறிவாலும், அனுபவத்தாலும் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும், அவற்றை எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவது என்ற திறனை அனைவரும் வளர்த்துக் கொண்டால் உயர்ந்த நிலைக்குச் செல்வது உறுதி.

விமர்சனம் மற்றவர்களின் தயாரிப்புகளை, உங்களுடைய பார்வையில் பார்க்க வைத்து வெளியிடப்படும் கருத்து என்பதால் உங்கள் கோணத்தை உலகிற்கு பிரதிபலிக்கும் திறனாகும். நல்ல விமர்சனப் பண்பை வளர்த்துக் கொள்வது விரைவான வளர்ச்சிக்கு வித்திடும்.

புதுமை படைக்கும் திறனும், மக்களை கையாளும் திறனும், ஒருங்கிணைந்து செயல்படும் திறனும் எல்லாக் காலத்திற்கும் இன்றியமையாதது. எனவே அவை கடந்த காலத்திறன் சிறந்த பண்புகள் பட்டியலிலும், எதிர்கால பட்டியலிலும் இடம் பெறுவதைக் காணலாம். எப்போதும் புதியன படைக்கும் திறனுடன் இருப்பவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு. அத்துடன் வாடிக்கையாளர்களான மக்களை கவரவும், கையாளவும் தெரிந்திருந்தால் வெற்றிக்கனியை ருசித்துக் கொண்டே இருக்கலாம். மக்களுடன் மட்டுமல்லாமல், அலுவலகத்தில் அனைவரும் குழுவாக இணைந்து செயலாற்றத் தெரிந்தால் பிரமாண்ட மாற்றங்களையும் சுலபமாகச் சாதிக்கலாம்.

பட்டியலில் புதிதாக, உணர்ச்சிசார் நுண்ணறிவுத் திறன் எதிர்காலத்திற்கான அவசியமான பண்பாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றைப்பற்றிய புரிதல், வெளிப்படுத்துதல் திறன் மட்டுமல்லாது தன்னுடைய உணர்வுகள் மற்றும் பிறரது உணர்வுகளையும் புரிந்து, கட்டுப்பாட்டுடன் செயல்படும் திறனை குறிக்கிறது. இந்தப் பண்பு இருந்தாலே தீர்மானித்தல் மற்றும் முடிவெடுக்கும் திறன் தானாக வந்துவிடும். இந்தத் திறனே, ஒரு பிரச்சினை மற்றும் வாடிக்கையாளரின் தேவையை புரிதலுடன் தீர்மானிக்கவும், முடிவெடுத்து வெற்றிகொள்ளவும் காரணமாகிறது.

அடுத்ததாக சேவை சார் நோக்கு திறன் அவசியம். இதுதான் சந்தையில் மக்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை தீர்மானித்து அதற்கான தயாரிப்புகளையும், தீர்வுகளையும் வழங்கத் தூண்டுகிறது. எனவே மாணவர்கள் இந்தத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட அனைத்து திறன்களையும் வெளிப்படுத்தும் பேச்சாற்றல் திறனே உங்களை மற்றவர்க்கு அடையாளப்படுத்தும் என்பதால் கூச்சம் தவிர்த்து பேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக இந்த பண்புகளின் பட்டியலில் அறிவாற்றல் நெகிழ்வுத்திறன் இடம் பெற்றுள்ளது. இதுவும் பணியாளர்கள், வாடிக்கையாளருடன் நட்புறவுடன் செயல்பட ஏற்ற திறனாகும். நம்முடன் உரையாடுபவருக்கு ஏற்ற அறிவாற்றலுடன் செயல்படும் இந்தத் திறன் நமது மேலாண்மைத் திறனையும், நட்புறவையும் வளர்க்கக் கூடியதாகும். அதாவது இடமறிந்து, பொருளறிந்து, திறனறிந்து செயல்படும் அறிவாற்றலே இந்தப் பண்பாகும்.

மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அனைத்து ஆற்றல்களையும் வளர்த்துக் கொண்டு வளமான எதிர் காலம் பெற வாழ்த்துக்கள்.

Next Story