உலகின் முதல் புதுமை மின் நிலையம்


உலகின் முதல் புதுமை மின் நிலையம்
x
தினத்தந்தி 22 Jan 2018 8:10 AM GMT (Updated: 22 Jan 2018 8:10 AM GMT)

பூமியில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிறுவனம் ஐஸ்லாந்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம்ஒர்க்ஸ் நிறுவனம், ஐஸ்லாந்தில் புவிவெப்ப ஆற்றல் மின்நிறுவனம் ஒன்றை நிறுவி உள்ளது. இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது இந்த மின் நிறுவனம். வழக்கமாக அனல்மின் நிலையங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழும். ஆனால் இந்த மின் நிலையம் கார்பன்-டை-ஆக்ஸைடு கழிவுகளை, நிலத்தடி பாறையில் இருந்து உறிஞ்சி, மின்னாற்றல் உற்பத்தி செய்கிறது.

700 மீட்டர் ஆழத்தில் உள்ள கருங்கல் பாறையில் இருந்து இந்த வாயுவை உறிஞ்சி எடுக்கிறார்கள். உறிஞ்சப்படும் கார்பன்-டை-ஆக்சைடை குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தி மின்சாரமாக மாற்றுகிறார்கள்.

இப்படி திடப்பொருளில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சும் நுட்பத்தை சுவிஸ் விஞ்ஞானிகள் குழு 2 ஆண்டு முயற்சியின் பலனாக கண்டுபிடித்துள்ளது. இந்த நுட்பம் ‘கார்பிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நுட்பம், இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகத்தில் கார்பன்-டை- ஆக்சைடை உறிஞ்ச உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“பூமி முழுவதும் இந்த பாறை அடுக்கு பரவலாக காணப்படுகிறது. எனவே மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல், எந்த இடத்திலும் இந்த தொழில்நுட்பத்தில் மின்உற்பத்தி சாத்தியம்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏற்கனவே இந்த நிறுவனம் டி.ஏ.சி. எனும் நுட்பத்தில் சுற்றுப்புறத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி, சுத்திகரித்து வர்த்தக ரீதியில் விற்பனை செய்து வருகிறது. இதனால் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல் நண்பனாகவும் விளங்கி வருகிறது.

பூமிக்கு அடியில் உள்ள கார்பனை உறிஞ்சுவதால் ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் புதுமையான முறையில் மின்சாரம் தயாரிக்கும் இந்த நிறுவனம், தனது செயல்பாட்டை தொடங்கிவிட்டது.

Next Story