நிலவுக்குச் செல்லும் பட்டுப்பூச்சி


நிலவுக்குச் செல்லும் பட்டுப்பூச்சி
x
தினத்தந்தி 22 Jan 2018 8:17 AM GMT (Updated: 22 Jan 2018 8:17 AM GMT)

பூமியின் நிலவு, செவ்வாய் கிரகம் உள்ளிட்ட விண்வெளி அல்லது வேற்று உலகங்களில் குடியிருப்புகளை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

னிதனின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று நிலவில் கால் பதித்தது. விண்வெளிக்கு சென்று பத்திரமாக திரும்புவது என்பது மிகவும் கடினமாக இருந்த காலத்தில், நிகழ்த்தப்பட்ட மிக முக்கிய சாதனை இது. இப்போது பூமியின் நிலவு, செவ்வாய் கிரகம் உள்ளிட்ட விண்வெளி அல்லது வேற்று உலகங்களில் குடியிருப்புகளை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளி அல்லது வேற்று கிரகங்களில் விண்வெளி கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் தரையிறங்குவதும், ‘மார்ஸ் ரோவர்’ உள்ளிட்ட பல ரோபாட்டுகள் மாதக்கணக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதும் மனிதர்கள் அங்கு சென்று உயிருடன் திரும்புவதற்கு இணையான மிகப்பெரிய சாதனைகளாக பார்க்கப் படுவது இல்லை. காரணம், அவை அனைத்தும் உயிரற்ற எந்திரங்கள்.

மிகவும் அசாதாரணமான தட்பவெப்ப சூழல் ஆபத்துகளைக் கொண்ட விண்வெளியில், வேற்று கிரகங்கள் மற்றும் நிலவில் மனிதனோ அல்லது பிற உயிர்களோ சென்று சில பல நாட்கள் முதல் மாதங்கள் அல்லது வருடக்கணக்கில் வாழ முடியுமா என்பதைக் கண்டறிய முயலும் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்ட வண்ணமாய் இருக்கின்றன. அந்த வகையில் வருகிற 2030 களின் தொடக்கத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று திரும்பும் திட்டம் நாசா உள்ளிட்ட உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வுக்கூடங்களால் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்பு வதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப் பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற ஜூன் மாதம் ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்த உள்ளது.

சாங் இ திட்டம் மூலமாக நிலவைச் சுற்றிவரக்கூடிய இரண்டு விண் சுற்றுக்கலன்கள் அல்லது ‘ஆர்பிட்டர்கள்’ மற்றும் நிலவில் தரையிறங்கும் ஒரு ‘லேண்டர்’ ஆகியவை இதற்கு முன்னர் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சாங் இ 4 மிஷன் மூலமாக நிலவின் நிலவியல் மற்றும் நிலவின் ஈர்ப்பு விசை மூலம் பூமியின் பூச்சிகள் மற்றும் தாவரங்களுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு செய்யப்பட உள்ளது.

முக்கியமாக, வருகிற ஜூன் மாதம் தொடங்கும் சாங் இ 4 மிஷன் மூலமாக, ஒரு ‘லேண்டர்’ மற்றும் ஒரு ‘ரோவர்’ ஆகியவற்றைத் தாங்கிச் செல்லும் லாங் மார்ச் 5 (Long March 5 rocket) எனும் ராக்கெட் முதலில் அனுப்பப்படும். லாங் மார்ச்சானது, லெக்ராஞ்ச் புள்ளி (Earth Moon L2 Lagrange Point) எனும் விண்வெளிப் பகுதியை அடைந்த பிறகு சுமார் 6 மாதங்கள் கழித்து, அதனுள் இருக்கும் ‘மூன் லேண்டர்’ மற்றும் ‘மூன் ரோவர்’ ஆகிய கருவிகளை நிலவுக்கு அனுப்பும்.

நிலவுக்குடியிருப்புகளை அமைக்க ஏதுவான பகுதியாகக் கருதப்படும், நிலவில் உள்ள தென்துருவ ஐட்கின் பேசின் (the South Pole Aitken Basin) எனும் பகுதியைச் சென்றடைவதே சாங் இ 4 மிஷன் திட்டத்தின் நோக்கமாகும். நிலவின் தென்துருவ ஐட்கின் பேசினை அடையவிருக்கும் மூன் லேண்டருக்குள் அலுமினியம் அலாய்யால் ஆன ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் ஆகியவை இருக்கும் என்கிறார் அந்த பெட்டியை வடிவமைத்த ஆய்வாளர் சாங் யுவான்சுன்.

நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்திசெய்யும். இதற்கிடையில், உருளைக் கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.

அதெல்லாம் சரி, நிலவுக்கு அனுப்ப பூச்சிகளும் தாவரங்களும் எதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன?

நிலவின் ஈர்ப்பு சக்தியின் அளவு புவியீர்ப்பு சக்தியில் சுமார் 16 சதவீதம் மடங்கு மட்டுமே உள்ளது. அதாவது ‘மைக்ரோ கிராவிடி’ என்று சொல்லக்கூடிய இதன் அளவு 0.1654 g ஆகும்.

நிலவில் உள்ள இந்த ஈர்ப்பு சக்தியில் நமது பூமியில் இருக்கும் உயிரினங்களால் வாழ முடியுமா? என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. எனவே, இந்த நிலவாழ் உயிரினங்கள் நிலவில் எப்படி விதையிலிருந்து முளைக்கின்றன மற்றும் முட்டையில் இருந்து வெளிவந்து தாக்குப்பிடிக்கின்றன என்பதைப் பொறுத்து மனிதர்களால் நிலவில் வாழ முடியுமா? என்பது தெரியவரும்.

ஒருவேளை ‘முடியும்’ என்றால் என்னென்ன ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பவை கணிக்கப்படும். ஆனால், மைக்ரோ கிராவிட்டியினால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த ஆய்வும், அதன் முடிவுகளும் மிக முக்கியமானவையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story