ஆசனூர் அருகே 1 கி.மீ. தூரம் ரோட்டில் நடமாடிய சிறுத்தை


ஆசனூர் அருகே 1 கி.மீ. தூரம் ரோட்டில் நடமாடிய சிறுத்தை
x
தினத்தந்தி 22 Jan 2018 11:00 PM GMT (Updated: 22 Jan 2018 10:33 PM GMT)

ஆசனூர் அருகே 1 கி.மீ. தூரம் ரோட்டில் சிறுத்தை நடந்து சென்றது.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் இருந்து கேர்மாளத்துக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிஅளவில் 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தார்கள். இந்த கார் கெத்தேசால் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது ரோட்டில் ஏதோ ஒரு வனவிலங்கு சென்று கொண்டு இருந்தது. காரில் வந்தவர்கள் அதனை உற்று நோக்கி பார்த்தபோது அந்த விலங்கு சிறுத்தை புலி என்று தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை மெதுவாக ஓட்டிச்சென்றார்கள். காருக்கு முன்னால் சிறுத்தை நடந்து சென்று கொண்டு இருந்தது. உடனே சிறுத்தையை அவர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்துக்கொண்டனர்.

சிறுத்தை சென்றதால் அதனை பின்தொடர்ந்து காரை மெதுவாக ஓட்டினார்கள். சுமார் 1 கி.மீ. தூரம் அந்த சிறுத்தை ரோட்டில் ஹாயாக சென்று அருகே உள்ள ஒரு புதருக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர் காரில் வந்தவர்கள் அங்கிருந்து வேகமாக சென்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திம்பம்-தலமலை ரோட்டில் காளிதிம்பம் அருகே வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் ரோட்டின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு சிறுத்தை கடந்து செல்வதை பார்த்தார்கள். இதேபோல் சாலையில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தாளவாடி வனத்துறையினர் கூறும்போது, ‘சிறுத்தை உணவு தேடி இரவு நேரத்தில் ரோட்டை கடந்து செல்வது சகஜம் தான். எனவே மாலை 6 மணிக்கு மேல் தனியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை எங்கும் நிறுத்த வேண்டாம்.’ என்றனர். 

Next Story