கேட் 2016: விபத்தில் உயிர் பிழைத்து மாற்றுத்திறனாளியான மாணவர் முதலிடம் பிடித்தார்


கேட் 2016: விபத்தில் உயிர் பிழைத்து மாற்றுத்திறனாளியான மாணவர் முதலிடம் பிடித்தார்
x
தினத்தந்தி 11 Jan 2017 10:14 AM GMT (Updated: 11 Jan 2017 10:14 AM GMT)

சிமர்ப்ரீத் இப்போது குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பள்ளி படிப்பை சண்டிகாரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் உயர் நிலைப் பள்ளியில் முடித்தார்.

புதுடெல்லி,

கேட் 2016 பொது நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்து உள்ளார் மாணவர் சிமர்ப்ரீத் சிங்.

சிமர்ப்ரீத் சிங் உடல்நிலை பாதிப்பு சாதனைக்கு எந்தஒரு தடையும் கிடையாது என்பதை காட்டிஉள்ளார். இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) மேலாண்மை படிப்பதற்காக கேட் பொது நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்து காட்டிஉள்ளார் சிமர்ப்ரீத் சிங். 99.97 சதவிதம் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளார். 22 வயதாகும் சிமர்ப்ரீத் சிங் கடந்த 2015-ம் ஆண்டு விபத்தில் சிக்கி மாற்று திறனாளியானார். சிமர்ப்ரீத் இப்போது குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பள்ளி படிப்பை சண்டிகாரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் உயர் நிலைப் பள்ளியில் முடித்தார். 

பின்னர் தன்னுடைய என்ஜினியரிங் படிப்பை பிலானியில் உள்ள பிஐடிஎஸ்-சில் முடித்தார். 1.8 லட்சம் மாணவர்கள் எதிர்க்கொண்ட தேர்வில் முதலிடம் பிடித்து உள்ளார். 

சிமர்ப்ரீத் சிங்கின் தந்தை புஷ்பிந்தர் சிங் பேசுகையில், “என்னுடைய மகன் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சண்டிகாரில் இருந்து திரும்பிய போது விபத்தில் சிக்கினார், அப்போது அவருடைய தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி செயல் இழந்தது. பின்னர் என்னுடைய மகன் சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் நகர்ந்து வருகிறார். இதுதவிர, எந்தஒரு சிறப்பு வகுப்பிற்கும் செல்லாமல் என்னுடைய மகன் முதலிடம் பிடித்து உள்ளார்,” என்று கூறிஉள்ளார். சிமர்ப்ரீத் சிங் பேசுகையில், “பெங்களூரு மற்றும் ஆமதாபாத்தில் இருந்து எனக்கு அழைப்பு கிடைத்து உள்ளது, நான் ஆமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-மிற்கு செல்ல உள்ளேன். என்னுடைய துறையில் நான் முதன்மையாக இருக்க விரும்புகின்றேன்,” என்று கூறிஉள்ளார். 

குர்கானில் பணிபுரியும் மற்றொரு என்ஜினியர் பியூஸ் மிட்டால் 99.96 சதவிதம் பெற்று உள்ளார். 

Next Story