குஜராத் கடலோர பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதி படகில் ஊடுருவல்? கடலோரம் போலீஸ் தீவிர கண்காணிப்பு


குஜராத் கடலோர பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதி படகில் ஊடுருவல்? கடலோரம் போலீஸ் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2017 4:21 PM GMT (Updated: 17 Feb 2017 4:21 PM GMT)

குஜராத் கடலோர பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதி படகில் ஊடுருவியதாக தகவலை தொடர்ந்து கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பூஜ், 

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான ஜக்காவிற்கு நேற்று இரவு பாகிஸ்தான் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல்சார் எல்லையையொட்டி ஒரு படகு வந்துள்ளது. இது பற்றிய தகவலை உடனடியாக மத்திய உளவுத்துறை குஜராத் மாநில போலீசுடன் பகிர்ந்து கொண்டது.

இதுகுறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ஆந்திர மாநில துறைமுகம் ஒன்றில் இருந்து சென்ற ஒரு படகு, குஜராத் மாநிலத்தின் ஜக்காவ் அருகே நடுக்கடலுக்கு சென்றது. அப்போது பாகிஸ்தான் கடல் பகுதியில் இருந்து ஒரு படகு அங்கு வந்தது. அதில் இருந்த பாகிஸ்தானியர் ஒருவர் ஏற்கனவே இருந்த படகில் ஏறிக் கொள்ள அந்த படகு ஜக்காவ் துறைமுகம் நோக்கி சென்றது. படகில் வந்தவர் பாகிஸ்தான் பயங்கரவாதியாக இருக்கலாம். அவர் சாலை வழியாக ஆதிப்பூர் நோக்கி சென்று அங்கிருந்து மாநிலத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. எனவே குஜராத் போலீசார் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்’’ என்று அறிவுறுத்தி இருக்கிறது.

மத்திய உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கு குஜராத் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் போலீசார் நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர். கடலோர பகுதியையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story