உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று 3-ம் கட்ட தேர்தல் 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு


உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று 3-ம் கட்ட தேர்தல் 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2017 12:00 AM GMT (Updated: 19 Feb 2017 3:20 AM GMT)

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-ம் கட்ட தேர்தல் நடக்கிறது.

லக்னோ,

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் 69 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

821 வேட்பாளர்கள்

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாநிலத்தின் மத்திய மற்றும் அவாத் பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த 69 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பா.ஜனதா, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக 2.41 கோடி பேர் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இன்றைய வாக்குப்பதிவுக்காக 25,603 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துணை ராணுவம் மற்றும் மாநில போலீசார் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அக்னி பரீட்சை

மாநிலத்தில் அதிகப்படியான முக்கிய பிரமுகர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இந்த 3-ம் கட்ட தேர்தல் அமைந்துள்ளது. 11 மந்திரிகள் மற்றும் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் குடும்ப அங்கத்தினர் என பல முக்கிய பிரமுகர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.

சமாஜ்வாடியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் முலாயம் சிங் யாதவின் சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தலில் சமாஜ்வாடிக்கும், அகிலேஷ் யாதவுக்கும், முலாயம் ஆதரவாளர்களால் கடும் நெருக்கடி ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய தேர்தல் அகிலேசுக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. 

Next Story