காரில் கடத்தி பாலியல் தொல்லை பெண் மாஜிஸ்திரேட்டிடம் நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் மேலும் 2 பேர் கைது


காரில் கடத்தி பாலியல் தொல்லை பெண் மாஜிஸ்திரேட்டிடம் நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2017 11:30 PM GMT (Updated: 19 Feb 2017 9:54 PM GMT)

காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி நடிகை பாவனா பெண் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரம்,

காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி நடிகை பாவனா பெண் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னணி கதாநாயகி

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பாவனாவை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாவனா தற்போது ஜீன்போல்லால் இயக்கும் ‘ஹனிபி–2’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளா மாநிலம் திருச்சூரில் நடந்து வருகிறது.

கடந்த 17–ந்தேதியன்று அவர், படப்பிடிப்பை முடித்து விட்டு இரவு 8 மணிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்த சொகுசு காரில் கொச்சிக்கு திரும்பியபோது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மார்ட்டின் என்பவர் காரை ஓட்டினார். நெடும்பச்சேரி அருகில் உள்ள அதானி என்ற இடத்தில் கார் சென்ற போது பின்னால் வந்துகொண்டு இருந்த வேன் ஒன்று பாவனா கார்மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

காரில் கடத்தி பாலியல் தொல்லை

இதனால் டிரைவர் காரை நிறுத்தினார். அப்போது வேனில் இருந்து இறங்கிய 5 பேர் பாவனாவின் காருக்குள் அத்துமீறி நுழைந்து, டிரைவரை மிரட்டி இருக்கை மாற்றி உட்கார வைத்து காரை ஓட்டிச்சென்றனர். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி டிரைவர் மார்ட்டினை கீழே இறக்கி பின்னால் வந்த வேனில் ஏற்றினர். பிறகு காரை வெவ்வேறு இடங்களுக்கு தாறுமாறாக ஓட்டிச்சென்றனர். ஓடும் காரிலேயே பாவனாவை அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர்.

2 மணிநேரம் காமுகர்களிடம் சிக்கி பாவனா தவித்தார். பாலியல் தொல்லை கொடுத்ததை அவர்கள் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். நெருக்கமாக இருப்பதுபோன்று புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். பின்னர் கார் பலாரி வட்டம் என்ற இடத்தை நெருங்கியபோது கீழே இறங்கி பின்னால் வந்த வேனில் இருந்த மார்ட்டினை இறக்கி விட்டு அதே வேனில் அந்த ஆசாமிகள் தப்பிச்சென்று விட்டனர்.

பாவனா ரகசிய வாக்குமூலம்

இந்த சம்பவம் பட உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில், போலீசார் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

பாவனாவுக்கு காளமேச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

பாவனாவிடம் காளமேச்சேரி பெண் மாஜிஸ்திரேட்டு ரகசிய வாக்குமூலம் பதிவு செய்தார். இந்த வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

மேலும் 2 பேர் கைது

இந்த சம்பவத்தில், நடிகை பாவனாவின் காரை ஓட்டி வந்த டிரைவர் மார்ட்டினுக்கும், காருக்குள் ஏறிய மர்ம ஆசாமிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்ததால் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மார்ட்டினின் டெலிபோன் அழைப்பு எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. காரில் ஏறியவர்களில் ஒருவர் பாவனாவின் முன்னாள் டிரைவர் சுனில்குமார் என்று தெரியவந்துள்ளது. இவர் மீது போலீசில் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மார்ட்டினுக்கு சுனில்குமார்தான் பாவனாவிடம் சிபாரிசு செய்து டிரைவர் வேலை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள். குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகர்–நடிகைகள் பலர் சமூக வலைத்தளங்களில் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குற்றவாளிகளில் மேலும் 2 பேர் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நடிகர் மோகன்லால் கண்டனம்

இந்த கொடிய சம்பவம் குறித்து நடிகர் மோகன்லால் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர், ‘‘இந்த துயரமான தருணத்தில் அவருக்காக வேதனைப்படுகிறேன். இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

மேலும், ‘‘மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதைவிட, இத்தகைய கொடூரமான செயல்களை செய்வது பற்றி குற்றவாளிகள் சிந்திக்க கூட விடாமல், தடுத்து நிறுத்தும் வகையில் சட்டம்–ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்துவதை சமூகம் உறுதி செய்ய வேண்டும். அந்தத் தேவை எழுந்துள்ளது’’ எனவும் தெரிவித்தார்.

நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்துக்கு மலையாள நடிகர் சங்க தலைவர் இன்னோசன்ட் எம்.பி., நடிகர் பிருத்விராஜ், நடிகைகள் மஞ்சு வாரியார், ரீமா கலிங்கல், டைரக்டர் மேஜர் ரவி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


Next Story