ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த விவகாரம்: சிவசேனா எம்.பி.யை விமானத்தில் அனுமதிக்க தடை


ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த விவகாரம்: சிவசேனா எம்.பி.யை விமானத்தில் அனுமதிக்க தடை
x
தினத்தந்தி 24 March 2017 10:45 PM GMT (Updated: 24 March 2017 7:47 PM GMT)

ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.யை விமானத்தில் அனுமதிக்க தடை விதித்து விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

புதுடெல்லி

ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.யை விமானத்தில் அனுமதிக்க தடை விதித்து விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

ஊழியர்களிடம் தகராறு

மராட்டியத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா விமானத்தின் ‘பிசினஸ்’ வகுப்பில் டெல்லி செல்வதற்கான டிக்கெட் வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலையில் டெல்லி செல்ல புனே விமான நிலையத்துக்கு வந்தபோது, ‘எகனாமி’ வகுப்பு கொண்ட விமானம் மட்டுமே இருந்தது.

எனினும் அதில் பயணம் செய்த அவர் விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கியதும் விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதையறிந்து அங்கு வந்த ஏர் இந்தியா மேலாளர் சுகுமார் (வயது 60), கெய்க்வாட் எம்.பி.யை சமாதானப்படுத்த முயன்றார்.

25 முறை அடித்தார்

ஆனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கெய்க்வாட், மேலாளரை தாக்கி அவரது சட்டையை கிழித்தார். மேலும் அவரது கன்னத்தில் 25 முறை செருப்பால் அடித்தார். இதில் அவரது மூக்கு கண்ணாடியும் உடைந்தது.

டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சிவசேனா கட்சித்தலைமையும் அவருக்கு உத்தரவிட்டு உள்ளது.

தனியார் விமான நிறுவனங்கள்

இந்த மோசமான செயலில் ஈடுபட்ட கெய்க்வாட் எம்.பி.க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விமான நிறுவனங்கள், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன. அதன்படி கெய்க்வாட் எம்.பி.யை தனது விமானத்தில் அனுமதிக்க தடை விதித்து ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதைப்போல ‘இண்டிகோ’, ‘ஸ்பைஸ்ஜெட்’, ‘கோ ஏர்’, ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆகிய தனியார் விமான நிறுவனங்களும் அவருக்கு தடை விதித்து உள்ளன. இந்த நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்ட ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், ஊழியர்களின் மன உறுதியை தக்க வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

வருத்தம் தெரிவிக்க மறுப்பு

இதற்கிடையே ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என கெய்க்வாட் எம்.பி. கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நடந்த சம்பவத்துக்கு நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன். அவர்தான் (சுகுமார்) நிச்சயம் மன்னிப்பு கோர வேண்டும். ஒரு 60 வயது முதியவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story