முன் பதிவு செய்தால் பெட்ரோலிய பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் திட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை


முன் பதிவு செய்தால் பெட்ரோலிய பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் திட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை
x
தினத்தந்தி 21 April 2017 11:33 AM GMT (Updated: 21 April 2017 11:32 AM GMT)

முன் பதிவு செய்தால் பெட்ரோலிய பொருட்களை ஹோம் டெலிவரி செய்யும் திட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுடெல்லி,

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து பெட்ரோல் நிரப்ப வேண்டி இருப்பதால் அவர்களுக்கு கால விரயம் ஏற்படுகிறது. இதை சீர் செய்யும் வகையில் மத்திய பெட்ரோலிய  அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக தெரிகிறது. அதன்படி  நுகர்வோர்கள் முன்பதிவு செய்தால் பெட்ரோலிய பொருட்களை  ஹோம் டெலிவரி(வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பது) செய்யும் திட்டத்தை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ முன் பதிவு அடிப்படையில் பெட்ரோலிய பொருட்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் ஆராயப்பட்டு வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நுகர்வோர்கள் நீண்ட  நேரம் காத்திருப்பதை தவிர்க்க இந்த திட்டம் உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 350 மில்லியன் மக்கள் தினமும் பெட்ரோல் நிலையங்களை பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு 25 பில்லியன் ரூபாய் மதிப்பு அளவுக்கு இதனால் பணபரிமாற்றம் நிகழ்கிறது. உலகின் மூன்றாவது அதிக பெட்ரோலிய பொருட்களை நுகர்வு செய்யும் நாடாக இந்தியா உள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை தினமும் மாற்றியமைக்கும் திட்டத்தை முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை அடிப்படையில் மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக  அரசு அண்மையில் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமலாகும் என கூறப்படுகிறது. 


Next Story