மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் :பிரதமர் மோடி போர்ச்சுகல் புறப்பட்டுச்சென்றார்


மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் :பிரதமர் மோடி போர்ச்சுகல் புறப்பட்டுச்சென்றார்
x
தினத்தந்தி 24 Jun 2017 3:00 AM GMT (Updated: 24 Jun 2017 2:59 AM GMT)

அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இதன் முதற்கட்டமாக பிரதமர் மோடி போர்ச்சுகல் புறப்பட்டுச்சென்றார்

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய  3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி. இதற்காக இன்று காலை பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றார். அவரை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். 

முதற்கட்டமாக, போர்ச்சுக்கல் செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் அந்தோணியா கோஸ்டாவைச்சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. பின்னர்  அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அதிபர் டிரம்ப் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க பயணத்தின் போது பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர், அமைச்சர்கள் மட்டும் இன்றி அந்நாட்டு பெரும் தொழில் அதிபர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார். இதையடுத்து, பிரதமர் மோடி 27-ம் தேதி, நெதர்லாந்து செல்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுடன் சுமூகமான உறவு பேணப்படுவது மட்டுமல்லாமல், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Next Story