பெங்களூரு ஜெயிலில் இருக்கும் சசிகலா வேறு சிறைக்கு மாற்றமா?


பெங்களூரு ஜெயிலில் இருக்கும் சசிகலா வேறு சிறைக்கு மாற்றமா?
x
தினத்தந்தி 16 July 2017 11:55 PM GMT (Updated: 16 July 2017 11:54 PM GMT)

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றலாமா? என்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

பெங்களூரு

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர்(அம்மா அணி) சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.

இது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும், டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் 2 பிளவுகளாக பிரிந்து செயல்படுகிறார்கள்.

இதில் சிறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், சிறையில் முறைகேடுகளை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்படுவதாக கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று முன்தினம் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் தனித்தனியாக சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கைதிகள் கோஷமிட்டனர். அவர் ஆய்வு செய்து சிறையில் இருந்து திரும்பியபோதும் கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து தங்களின் அறைகளுக்கு செல்ல மறுத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெங்களூரு தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா கூறுகையில், ‘நேற்று இரவு (நேற்று முன்தினம்) கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், சிறைக்கு சென்ற நான் கைதிகளின் 2 பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினேன். இதனைத்தொடர்ந்து, கைதிகள் தங்களின் சிறை அறைகளுக்கு சென்றனர்’ என்றார்.

இது கைதிகளுக்குள் கோஷ்டி மோதலை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர். மேலும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், இதனால் அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடுமோ என்று அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது.

கைதிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இந்த பிரச்சினையால் அரசியல் தலைவராக இருக்கும் சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்று அரசு கருதுகிறது. அதோடு வரும் நாட்களில் இத்தகைய சிறப்பு வசதிகள் புகார்களை தடுக்க சசிகலாவை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு மாற்றலாமா? அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா? என்று கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசிக்க தொடங்கியுள்ளது.

கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு சசிகலாவை மாற்றினால் அதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி தேவை இல்லை என்றும், ஒருவேளை தமிழ்நாடு சிறைக்கோ அல்லது வேறு மாநில சிறைக்கோ அவரை மாற்றுவதாக இருந்தால் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி கண்டிப்பாக தேவை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சசிகலாவுக்கு உதவி செய்ய தமிழ் பேசும் 2 பெண்கள்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவுக்கு தமிழ்பேசும் மேரி, ரேகா என்ற 2 பெண் கைதிகள் உதவி செய்யும் பணியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இவர்கள் சமீபத்தில் துமகூரு சிறையில் இருந்து பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிறைக்கு ஆய்வு செய்ய சென்ற டி.ஐ.ஜி. ரூபாவை சூழ்ந்து மேரி, ரேகா ஆகியோர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story