காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் ரோபோக்களை களமிறக்குகிறது


காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் ரோபோக்களை களமிறக்குகிறது
x
தினத்தந்தி 11 Aug 2017 3:17 PM GMT (Updated: 11 Aug 2017 3:16 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் ரோபோக்களை களமிறக்க திட்டமிட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட ரோபோக்களால் திட்டமிட்ட இடங்களில் வெடிப்பொருட்களை சரியாக கையாள முடியும், இவ்வகையான ரோபோக்கள் விரைவில் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது. இருதரப்பு சண்டையின் போது ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவமும் நேரிட்டு வருகிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு எட்டப்பட்டு உள்ளது. இந்த ஆப்பரேஷனுக்கு மொத்தம் 544 ரோபோக்கள் வேண்டும் என ராணுவம் கோரி உள்ளது, இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் வழங்கி உள்ளது. உள்நாட்டிலே இதுபோன்ற ரோபோக்களை தயாரிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

ரோபோக்கள் உதவியுடன் ராணுவம் காடுகள், சாலைகள் மற்றும் நகர்புறங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும் என்பதே ராணுவத்தின் முக்கியமான நோக்கமாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் ரோபோட்டிக் முறை விரைவில் கொண்டுவரப்படலாம் எனவும் கூறப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் ராஷ்டிரிய ரைபிள் முக்கியமாக செயல்பட்டு வருகிறது, கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் இப்படையானது பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகிறது. 

இதனை சரிசெய்ய ரோபோட்டிக் முறையானது ராஷ்டீரிய ரைபிள் படைபிரிவால் கையாளப்படும் என ராணுவ தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ரோபோக்கள் மூலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை தொலைவில் இருந்த வண்ணம் கண்காணிக்க முடியும் நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும் என ராணுவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள், தகவல்களை உடனடியாக வெளியிடும் உள்ளீடுகள் உள்பட பலதரப்பட்ட சிஸ்டம்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் மிகவும் எடைகுறைவான மிகவும் நவீனமான ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. 

ரோபோக்களால் வெடிப்பொருட்களை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பது ராணுவத்தின் கோரிக்கையாகும், குறிப்பாக கையெறி குண்டுகளை பயன்படுத்தும் வகையில். இதற்கான அனுமதியானது பாதுகாப்புத் துறை தரப்பில் வழங்கப்பட்டு உள்ளது, இந்திய நிறுவனங்கள் மட்டுமே இந்த நகர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். ஏற்கனவே கண்ணி வெடிகுண்டுகளை பயன்படுத்துவதற்கு இந்திய பாதுகாப்பு துறை தயாரிப்புகளை ராணுவம் பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story