‘புளூ வேல்’ விளையாட்டால் தொடரும் ஆபத்து: 10 வகுப்பு மாணவன் தற்கொலை


‘புளூ வேல்’ விளையாட்டால் தொடரும் ஆபத்து: 10 வகுப்பு மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2017 7:11 AM GMT (Updated: 13 Aug 2017 7:10 AM GMT)

‘புளூ வேல்’ விளையாட்டால் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது, இப்போது 10 வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டு உள்ளான்.

கொல்கத்தா,

இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது.

விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர்.

மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த மன்பீரித் சிங் என்ற 14 வயது மாணவன், சமீபத்தில் புளூ வேல் கேம் விளையாடி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 13 வயது சிறுவன், புளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி, தான் படித்து வரும் பள்ளிக்கூடத்தின் 3–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, சக மாணவர்களால் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டான். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தடை விதிக்க கோரிக்கையும் அதிகரித்து உள்ளது.

இப்போது மேலும் ஒரு உயிரை ‘புளூ வேல்’ விளையாட்டு பறித்து உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்த அங்கன் தே என்ற 10-ம் வகுப்பு மாணவன் ‘ப்ளூ வேல்’ கேம்-க்கு அடிமையாக இருந்து உள்ளார். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த அங்கன் நேற்று வீட்டில் இருந்த கணினியின் முன்பு சிறிது நேரம் அமர்ந்து உள்ளார். பின்னர் குளிக்க சென்றுவிட்டு சாப்பிட வருவதாக கூறிய மாணவன், நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காதவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த அவனது பெற்றோர் குளியலறையின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் பிளாஸ்டிக் கவர்களால் தலையை மூடி, கழுத்து பகுதியில் கயிறால் கட்டி  தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கனின் நண்பன் பேசுகையில் அவன் புளூ வேல் கேம் விளையாடி வந்ததாக கூறிஉள்ளான்.

இந்த விளையாட்டிற்கு ரஷியாவில் கடந்த 2015-ல் இருந்து 2016 வரை சுமார் 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் அதிகரித்து வரும்நிலையில் கேம்மை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story