உறவினரால் கற்பழிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது


உறவினரால் கற்பழிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 17 Aug 2017 9:15 PM GMT (Updated: 17 Aug 2017 8:13 PM GMT)

கருவுற்றிருந்த அந்த சிறுமிக்கு சண்டிகர் அரசு மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

சண்டிகர்,

சண்டிகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலிக்காக கடந்த மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. சிறுமியின் உறவினர் ஒருவர் தொடர்ந்து அவரை கற்பழித்து வந்ததால் இந்த கரு உருவானதும் வெளிச்சத்துக்கு வந்தது.

எனவே அந்த கருவை கலைக்க அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 32 வார வளர்ச்சி பெற்று இருந்த அந்த கருவை கலைப்பதால் தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கோர்ட்டில் அறிக்கை அளித்தனர். எனவே கருவை கலைக்க அனுமதி மறுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கருவுற்றிருந்த அந்த சிறுமிக்கு சண்டிகர் அரசு மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் எடை (2.2 கிலோ) வழக்கத்தை விட சற்று குறைவாக இருந்தாலும், அதன் உடல்நிலையும் சீராக இருப்பதாக அவர்கள் கூறினர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தை விரைவில் நலம்பெறும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

உறவினரால் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, தான் குழந்தை பெற்றது இதுவரை தெரியாது. அவரது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்யவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரிடம் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

எனவே பிறந்த குழந்தையை காப்பகத்தில் சேர்த்து தத்து கொடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story