ராஜீவை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ராஜீவை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2017 10:30 PM GMT (Updated: 17 Aug 2017 8:39 PM GMT)

ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றி சி.பிஐ. பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை நடத்திய விசாரணை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

புதுடெல்லி,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. எனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த பின்னர், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையை 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அமைத்தது.

இந்த முகமை, ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த ரகசிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு (தடா) கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறது.

பேரறிவாளன் மனு

இந்தநிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சென்னை தடா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையின் விசாரணையை இந்த கோர்ட்டு கண்காணிக்கவேண்டும். அந்த விசாரணையை துரிதப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறியவும் இந்த முகமைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தடா கோர்ட்டு ஏற்கனவே தடா சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனை விசாரிக்க தங்களுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிவித்தது. பின்னர் பேரறிவாளன் தரப்பில் இந்த மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தபோது, இது தடா தொடர்பான வழக்கு என்பதால் இதனை விசாரிக்க தங்களுக்கு முகாந்திரம் இல்லை என்று ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதைத்தொடர்ந்து பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை குறித்து பரவலான முறையில் விசாரணையை மேற்கொள்ள பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை கடந்த 1997-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்த விசாரணை முகமை எவ்வித இலக்கும் இன்றி செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ. தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முகமை செயல்படாமல் முற்றிலும் முடங்கி கிடப்பதாக தெரிகிறது. இந்த விசாரணை அமைப்புக்காக இதுவரை பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சி.பி.ஐ. அமைப்பின் செயல்பாடு கேள்விக்குரியதாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக நான் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறேன். இந்த விசாரணையில் என்னை பற்றியும் கூறப்பட்டு இருக்கிறது என்ற நிலையில், அதில் என்னதான் கூறப்பட்டு உள்ளது என்ற தகவல் இன்றி முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையின் செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

விசாரணை

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன் தரப்பில் வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன், பாரிவேந்தன் ஆகியோர் ஆஜரானர்கள்.

அப்போது அவர்கள் தரப்பில், “இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடந்து வருவதாக சி.பி.ஐ. தரப்பு கூறுகிறது. ஆனால் ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்திய பெல்ட்டில் பொருத்தப்பட்ட வெடிகுண்டின் தன்மை குறித்து இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. பேரறிவாளன் மீது சி.பி.ஐ. வைத்த குற்றச்சாட்டே அந்த வெடிகுண்டை இயக்க அவர் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான். இதற்காக பல ஆண்டுகளாக அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஒரு கொலை வழக்கில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றியே விசாரணை எதுவும் நடத்தாத போது பேரறிவாளன்தான் குற்றவாளி என்பதை எந்த அடிப்படையில் முடிவு செய்தது சி.பி.ஐ?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

சி.பி.ஐ.க்கு உத்தரவு

இதற்கு நீதிபதிகள், “புதன்கிழமை சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் வெடிகுண்டு பற்றி ஒன்றும் கூறவில்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்த பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை என்ன கண்டுபிடித்தது என்பது பற்றி கூற வேண்டும்” என்றனர். அத்துடன், இதில் பேரறிவாளன் தொடர்பு படுத்தப்பட்டு உள்ளதால் இந்த கேள்விக்கு சிறப்பு விசாரணை முகமை பதில் அளிக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story