கொல்கத்தா ஐகோர்ட்டு கண்டனம்; சதிதிட்டங்களுக்கு பலியாகமாட்டேன் - மம்தா பானர்ஜி


கொல்கத்தா ஐகோர்ட்டு கண்டனம்; சதிதிட்டங்களுக்கு பலியாகமாட்டேன் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 21 Sep 2017 3:05 PM GMT (Updated: 21 Sep 2017 3:04 PM GMT)

மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ம் தேதி மொகாரம் அன்று துர்கா சிலைகளை கரைக்க தடையில்லை என்று கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு முஸ்லீம்களின் பண்டிகையான மொகரமும், இந்துக்களின் பண்டிகையுமான துர்கா பூஜாவும் வரும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே நாளில் வர இருக்கிறது. இதன் காரணமாக மதம் சார்ந்த மோதல்கள் தலை தூக்கும் என்ற காரணத்திற்காக துர்கா சிலைகளை கரைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அரசின் இந்த முடிவு இந்து மதத்தினரின் சம்பிரதாயத்திற்கு தடை போடுவதாகவும், முஸ்லீம் மதத்தினரின் வாக்குவங்கியை ஈர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரம் ஐகோர்ட்டு சென்றது.  

விசாரணையின் போது மம்தாவின் உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ம் தேதி மொகாரம் அன்று துர்கா சிலைகளை கரைக்க தடையில்லை என்றது. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பண்டிகையை ஒன்றாக கொண்டாட அனுமதியுங்கள் என்ற ஐகோர்ட்டு, இரு பிரிவுக்கு இடையே எல்லையை வகுக்காதீர் என்றது. மேலும், மொகரம் ஊர்வலம் மற்றும் துர்கா பூஜை நிகழ்ச்சி ஊர்வலமும் தனித்தனியான பாதைகளில் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். மேலும், நள்ளிரவு 12 மணி வரை அனைத்து தினமும் துர்கா சிலைகளை கரைக்கலாம் என உத்தரவிட்டது.

கடந்த மாதம் மம்தா பானர்ஜி உத்தரவிடுகையில், “இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பிரச்சனையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். எல்லா மதமும் நம்முடையது. துர்கா பூஜை பந்தல் வழியாக ஊர்வலம் செல்லும்போது பிரச்சனை நேரிட்டால், நாம்தான் பாதிக்கப்படுவோம்,” என்றார். இப்போது ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளநிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி வன்முறை நேரிட்டால் சதியாளார்களே பொறுப்பு என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். 

கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவை குறிப்பிட்டு பேசிய மம்தா பானர்ஜி, “என்னுடைய கழுத்தை யாராவது துண்டிக்கலாம், ஆனால் சதிதிட்டங்களுக்கு நான் இரையாக மாட்டேன்,” என்றார். “ஏதாவது நடைபெற்றால், சதியாளர்களின் பொறுப்பாகும்,” என்றார் மம்தா பானர்ஜி.


Next Story