புதுவையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி எம்.எல்.ஏ. சட்டை கிழிந்தது


புதுவையில் விவசாயிகள்  மீது போலீஸ் தடியடி எம்.எல்.ஏ. சட்டை கிழிந்தது
x
தினத்தந்தி 13 Oct 2017 8:53 AM GMT (Updated: 13 Oct 2017 8:53 AM GMT)

புதுவையில் தடைகளை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தினர் எம்.எல்.ஏ. சட்டை கிழிந்தது.

சென்னை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங் கிணைந்த கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கபட்டு இருந்தது. 

முதலில் இந்த போரட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருந்த நிலையில் நேற்றிரவு திடீரென இந்த போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால், போலீசாரின் தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. அறிவித்தார். 

அதன்படி போராட்டம் நடத்த புதுவை மற்றும் தமிழக பகுதி கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் மற்றும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஏராளமானோர் இன்று காலை லிங்கா ரெட்டி பாளையம் பெட்ரோல் பங்க் எதிரே ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடத்த சர்க்கரை ஆலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் பேரிக்காடு அமைத்து ஊர் வலத்தினரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீ சாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

முதலில் போராட்டத்துக்கு அனுமதி அளித்து விட்டு பின்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். அப்போது திடீரென போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்த ஆலையை நோக்கி சென்றனர்.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியில் கூனிச்சம்பட்டு முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரும், சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினருமான ஞானசேகர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Next Story