கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு


கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2017 6:14 AM GMT (Updated: 18 Oct 2017 6:14 AM GMT)

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் சிறப்பு விசாரணை குழு நடவடிக்கை எடுத்துவருகிறது.



பெங்களூரு, 

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55). பத்திரிகையாளரும், எழுத்தாளருமான இவர் அவருடைய வீட்டில் வைத்து கடந்த மாதம் (செப்டம்பர்) 5–ந் தேதி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகளை உளவுத்துறை ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த நிலையில், கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடங்களை கடந்த 14–ந் தேதி சிறப்பு விசாரணை குழுவினர் வெளியிட்டனர். இதில், ஒரு கொலையாளின் படம் மட்டும் 2 பரிமாணங்களில் வெளியிடப்பட்டன.

மேலும், கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மர்மநபர் அவருடைய வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி நோட்டமிட்டு செல்வது போன்ற வீடியோவையும் சிறப்பு விசாரணை குழு வெளியிட்டது. இந்த நிலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளில் செல்லும் மர்மநபர் ஹெல்மெட் அணிந்து உள்ளதால் அவருடைய முகத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு தடயவியல் நிபுணர்களின் உதவியை சிறப்பு விசாரணை குழுவினர் நாடினர். அதன்மூலம் ஹெல்மெட் அணிந்து செல்லும் மர்மநபரின் முகத்தை சிறப்பு விசாரணை குழுவினர் அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story