பீகாரில் தலைவர் வீட்டில் நுழைந்த தொழிலாளிக்கு ” பஞ்சாயத்தில் நூதன தண்டனை”
பீகாரில் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் நுழைந்த தொழிலாளி ஒருவருக்கு பெண்களை வைத்து செருப்பால் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் சொந்த ஊரான பீகார்ஷரீப் மாவட்டத்தில் உள்ள அஜய்பர் ஊரில் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அஜய்புர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சுரேந்திரா. இவரது வீட்டிற்கு கடந்த 18-ம் தேதி மகேஷ் தாக்கூர் என்ற முடி திருத்தும் தொழிலாளி அரசாங்க திட்டத்தை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. பெண்கள் மட்டும் இருந்துள்ளனர்.
இதனை அறியாத மகேஷ் தாக்கூர் வீட்டிற்குள் சென்றார். பஞ்சாயத்து தலைவர் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவர் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆண்கள் வீட்டில் இல்லாத போது தொழிலாளி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தது பஞ்சாயத்து தலைவர் சுரேந்திராவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக பஞ்சாயத்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மறுநாள் பஞ்சாயத்து கூடியது முடிதிருத்தம் தொழிலாளி மகேஷ் தாக்கூர் பஞ்சாயத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா தீர்ப்பு வழங்கினார். அதில் முடி திருத்தும் தொழிலாளியை பெண்கள் செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், செருப்பில் அவர் எச்சிலை துப்பி அதனை நாக்கல் நக்க வேண்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக வீடியோவும் வெளியாகி உள்ளது அதில் 2 பெண்கள் அவரை தாக்குவது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பாதிக்கப்பட்டவர் சம்பவத்தை உறுதி செய்தார். இதனையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பீகார் மந்திரி நந்த கிஷோர் யாதவ், கூறுகையில்,
இதுபோன்ற சம்பவங்கள் பொறுத்துக்கொள்ளபடமாட்டாது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story