மகாராஷ்டிரா செல்லவேண்டிய சுவாபிமானி எக்ஸ்பிரஸ் வழி தவறி மத்தியபிரதேசம் சென்றது


மகாராஷ்டிரா செல்லவேண்டிய சுவாபிமானி எக்ஸ்பிரஸ்  வழி தவறி மத்தியபிரதேசம் சென்றது
x
தினத்தந்தி 23 Nov 2017 9:04 AM GMT (Updated: 23 Nov 2017 9:08 AM GMT)

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் செல்ல வேண்டிய ரெயில் ஒன்று 160 கிலோமீட்டர் தூரம் தவறாக வழி மாறி மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு சென்றனர். இவர்கள் பல மாநில விவசாயிகளுடன் இணைந்து அங்கு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று போராட்டத்தை முடித்துகொண்டு 200 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா செல்வதற்காக சுவாபிமானி விரைவு ரெயிலில் பயணித்துள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிரா செல்ல வேண்டிய குறித்த ரெயில் பாதி வழியில் தடம் மாறி சுமார் 160 கிலோ மீட்டர் தவறான வழியில் சென்றுள்ளது.

குறித்த ரெயில் மத்தியபிரதேசத்தை அடைந்த பின்னரே ரெயில் வழி மாறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும் வழி தவறி சென்றது குறித்து விவசாயிகளிடம் சரியான விளக்கத்தை அளிக்க ரெயில்வே அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர்.

இதனையடுத்து விவசாயிகள் அதே இடத்தில் மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்ததை அடுத்து ரெயில்வே நிர்வாகம் சமாதானம் செய்ய முயன்றது. அதன்பின் அவர்களுக்கு வேறொரு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு சரியான காரணம் இதுவரை ரெயில்வே நிர்வாகத்திடமிருந்து தெரிவிக்கப்படவில்லை. ரெயில் டிராக்குகள் தவறாக மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணையை தொடங்க ரெயில்வே நிர்வாகம் ஆணையிட்டுள்ளது.

Next Story