ராமர் பாலம் புராணக்கதையா? கட்டப்பட்டதா? விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் டிவி நிகழ்ச்சி!


ராமர் பாலம் புராணக்கதையா? கட்டப்பட்டதா? விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் டிவி நிகழ்ச்சி!
x
தினத்தந்தி 12 Dec 2017 10:56 AM GMT (Updated: 12 Dec 2017 11:01 AM GMT)

அமெரிக்காவின் அறிவியல் சேனலின் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் நிகழ்ச்சியின் விளம்பர வீடியோவில் ராமர் பாலம் இயற்கையானது கிடையாது, மனிதரால் கட்டப்பட்டதுதான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி செல்கிறது. இது இயற்கையாக உருவானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகின்றனர். ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என்று புவியியல் ஆதாரங்கள் கூறுவதாக என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா கூறி உள்ளது. இதற்கிடையே இவ்வழியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்ட  மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப்பொருளாகியது.

தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை. இந்த திட்டம் மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சி காலத்தில், 2005-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டப்பணிகளால் ராமேசுவரத்துக்கும், மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என கருத்து எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. 

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் ‘சேது சமுத்திர திட்டம் ராமர் சேது பாலத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மாற்றுவழியில் நிறைவேற்றப்படும்’  என தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை நிறைவேற்றும்போது, ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என பா.ஜனதா அரசு கூறிஉள்ளது. சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.

 இந்தியா - இலங்கை இடையே புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ராமர் சேது பாலம் சேது சமுத்திர திட்டத்தால் சேதமடையும் என்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமர் பாலம் புராணக்கதையா? அல்லது மனிதர்களால் கட்டப்பட்டதா? என்ற விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அறிவியல் சேனலில் அறிவியல்பூர்வ ஆய்வுகள் அடங்கிய ஆராய்ச்சி செய்து தொகுப்பும் வெளியாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் உண்மையானதா? அறிவியலாளர்கள் கூற்று என்ன? என்பது தொடர்பான செய்தி தொகுப்பு அமெரிக்காவின் அறிவியல் சேனல் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸில் வெளியாகிறது. புதன் கிழமை காலை 7:30 மணியில் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அறிவியல் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள ஆராய்ச்சி செய்தியின் விளம்பர வீடியோவில் ராமர் பாலம் இயற்கையானது கிடையாது, மனிதரால் கட்டப்பட்டதுதான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அறிவியல் சேனல் வெளியிட்டு உள்ள விளம்பர வீடியோவானது மில்லியன் மக்களுக்கு அதிகமானோர் பார்க்கப்பட்டு உள்ளது. தங்களுடைய கருத்தையும் பதிவு செய்து வருகிறார்கள். மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, டுவிட்டரில் ஜெய் ஸ்ரீ ராம் என வீடியோவின் இணைப்பை பகிர்ந்து உள்ளார். பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி விரைவில் அப்பகுதிக்கு செல்ல உள்ளேன் என்று கூறிஉள்ளார். செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஆய்வறிக்கையில் முக்கிய இடம்பெற்று உள்ளது. 

“மணல் திட்டு வேண்டுமென்றால் இயற்கையானதாக இருக்கலாம், ஆனால் அதற்கு மேலான கட்டமைப்புகள் இயற்கையானதாக இருக்கமுடியாது,” என வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story