ராகுல்காந்தி ஆவேச பேச்சு ‘பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலை அன்பால் வெல்வோம்’


ராகுல்காந்தி ஆவேச பேச்சு ‘பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலை அன்பால் வெல்வோம்’
x
தினத்தந்தி 17 Dec 2017 12:00 AM GMT (Updated: 16 Dec 2017 9:39 PM GMT)

காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி தனது கன்னிப் பேச்சில் ‘பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலை அன்பால் வெல்வோம்’ என்று ஆவேசமாக சூளுரைத்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி மூத்த தலைவர்கள் முன்னிலையில் நேற்று காலை பதவி ஏற்றுக் கொண்டார்.

தலைவர்களின் பாராட்டு உரைகளைத் தொடர்ந்து ராகுல்காந்தி ஏற்புரை நிகழ்த்தினார். தலைவரான பிறகு நிகழ்த்திய தனது கன்னிப் பேச்சிலேயே அவர் பா.ஜனதாவை ஆவேசமாக தாக்கினார். அவர் கூறியதாவது:–

பா.ஜனதா தனக்காக போராடுகிறது. ஆனால் காங்கிரசோ நாட்டு மக்கள் அனைவருக்கும் போராடுகிறது. நாட்டின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களின் விருப்பங்களையும் அறிந்து செயல்படும் கருவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.

பா.ஜனதா நாட்டில் வெறுப்பு அரசியலையும், மதவாதத்தையும் பரப்பி வருகிறது. அதை நாம் முறியடிப்போம். அவர்கள் தீயை பற்ற வைத்தால் நாம் அதை அணைப்போம்.

காங்கிரஸ் 21–ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல விரும்புகிறது. ஆனால் பிரதமரோ தற்போது நாட்டை பின்நோக்கி கற்காலத்துக்கு கொண்டு செல்கிறார்.

பா.ஜனதாவுடன் கொள்கை வேறுபாடு நமக்கு இருந்தபோதிலும் கூட அவர்களை காங்கிரஸ் சகோதர, சகோதரிகளாகவே பார்க்கிறது. வெறுப்பை வெறுப்பால் முறியடிக்க நாம் விரும்பவில்லை.

முன்பும் சரி, எதிர்காலத்திலும் சரி சவால்களை காங்கிரஸ் அன்போடும், கருணையோடுமே எதிர்கொள்ளும்.  கட்சியின் உயரிய தலைமைப் பதவியை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story