அமித் ஷா மீதான வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரண வழக்கு; மிக முக்கிய பிரச்சினை - சுப்ரீம் கோர்ட்டு


அமித் ஷா மீதான வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரண வழக்கு; மிக முக்கிய பிரச்சினை - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 12 Jan 2018 12:58 PM GMT (Updated: 12 Jan 2018 12:58 PM GMT)

சொராபுதின் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மர்ம மரணத்தை மிகவும் முக்கிய பிரச்சனை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. #BHLoya #SupremeCourt #SohrabuddinCase



புதுடெல்லி, 

  
குஜராத் மாநிலத்தில், 2005–ம் ஆண்டு, சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி, மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கும், சொராபுதின் வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருடைய சகோதரி, 2 மாதங்களுக்கு முன்பு சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றை இன்று  விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சொராபுதின் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மர்ம மரணத்தை மிகவும் முக்கிய பிரச்சனை என கருத்து தெரிவித்து உள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.  “நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரணம் மிகவும் முக்கியமான விவகாரமாகும். இருதரப்பு விசாரணையும் மிகவும் முக்கியமானது. இவ்விவகாரத்தில் மராட்டிய மாநில அரசு சார்பில் 15-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்,” என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story