மன்மோகன்சிங் மீது ஆ.ராசா வேதனை


மன்மோகன்சிங் மீது ஆ.ராசா வேதனை
x
தினத்தந்தி 18 Jan 2018 11:15 PM GMT (Updated: 18 Jan 2018 8:13 PM GMT)

மன்மோன்சிங் மீது ஆ.ராசா வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். “என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் மவுனம் காத்தார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி கடந்த மாதம் தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஆ.ராசா, தன் தரப்பு நியாயங்களை விளக்கி ‘2 ஜி சாகா அன்போல்ட்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியதாக தகவல்கள் வெளியாகின. அந்த புத்தகம் இப்போது வெளியாகி உள்ளது.

ஆ.ராசா எழுதி இருப்பதாவது:- பிரதமர் மன்மோகன்சிங்கிடம் 2 ஜி அலைக்கற்றைகளை புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான முழு செயல்முறையையும் விளக்கினேன். அதைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அவரது ஒப்புதல் பெற்றேன்.

ஆனால் பிரதமருக்கு அவருடைய ஆலோசகர்கள் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வந்தனர். பிரதமர் அலுவலகத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் செல்வாக்கு மிகுந்த நபர்களுக்கு செல்வாக்கு இருந்தது.

எனது முழுமையான நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும் காட்டிய உணர்ச்சிமிகுந்த மவுனம், நமது நாட்டின் கூட்டு மனசாட்சியை மவுனம் ஆக்குவதுபோல அமைந்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு புகார்கள் தொடர்பாக தொலைதொடர்புத்துறை அமைச்சகத்திலும், சில தொலை தொடர்பு நிறுவன அலுவலகங்களிலும் சி.பி.ஐ. சோதனைகள் நடந்த பின்னர் 2009-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ந் தேதி மாலை சுமார் 7 மணியளவில் பிரதமரை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்தேன். பிரதமர் அலுவலகத்தில் அப்போது முதன்மை செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் உடன் இருந்தார். சி.பி.ஐ. நடத்திய சோதனைகளைப் பற்றி நான் கூறியபோது பிரதமர் அதிர்ச்சி அடைந்தார் என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

2 ஜி ஊழல் குற்றச்சாட்டுகள், நாட்டின் நிர்வாக அமைப்பின் புனிதத்தன்மையின் மீதான வெட்கக்கேடான குற்றசாட்டுகள் ஆகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது அரசை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தில் அதற்கான துப்பாக்கி, தலைமை கணக்கு தணிக்கையரான வினோத் ராயின் தோளில் வைக்கப்பட்டது என்பது எனது நம்பிக்கை. இவ்வாறு அவர் அதில் எழுதி உள்ளார்.

Next Story