திருப்பூர் மருத்துவ மாணவர் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி


திருப்பூர் மருத்துவ மாணவர் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி
x
தினத்தந்தி 18 Jan 2018 11:30 PM GMT (Updated: 18 Jan 2018 8:38 PM GMT)

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் சரத் பிரபு (வயது 24). கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, டெல்லியில் உள்ள குருதேக் பகதூர் மருத்துவமனையுடன் இணைந்த யூ.சி.எம்.எஸ். (யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ்) மருத்துவக்கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரிக்கு அருகில் உள்ள தில்ஷாத் கார்டன் பகுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்த சரத்பிரபு நேற்று முன்தினம் அங்கு மர்மமான முறையில் இறந்தார். சரத் பிரபு கழிவறையில் மயங்கி கிடந்ததாகவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சரத்பிரபுவின் உடல் டெல்லி அரசாங்கம் நியமித்த 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடல் கோவைக்கு விமானத்தில் எடுத்துச் செல்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

மத்திய பட்ஜெட் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சரத் பிரபுவின் உடல் வைக்கப்பட்டிருந்த குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மாணவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவரின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது மாணவரின் தந்தை செல்வமணி துணை முதல்-அமைச்சரிடம், ‘தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் டெல்லியில் பயிலும் பயிற்சி மருத்துவர்கள் 8 மணி நேரத்துக்கு பதில் 30 முதல் 36 மணி நேரம் வரை பணியாற்ற வைக்கிறார்கள்.

இது மாணவர்களுக்கு பெருமளவில் மன அழுத்தத்தை தருகிறது. இது மட்டுமல்ல. போட்டி, பொறாமைகள் காரணமாக ஊசி செலுத்தி கொல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை உரிய முறையில் விசாரணை நடத்த தமிழக அரசு உதவ வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

Next Story