ஆண்டாள் என் தாய் போன்றவர், எனது தாயை சிறுமைப்படுத்துவேனா? கவிஞர் வைரமுத்து பேட்டி


ஆண்டாள் என் தாய் போன்றவர், எனது தாயை சிறுமைப்படுத்துவேனா? கவிஞர் வைரமுத்து பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2018 10:20 AM GMT (Updated: 19 Jan 2018 10:20 AM GMT)

ஆண்டாள் என்னுடைய தாய் போன்றவர், அவரை நான் அவமதிக்கவில்லை என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்து உள்ளார். #Andal #Vairamuthu


சென்னை,

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறுதலான கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்துக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருபுறம் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் அவருக்கு எதிராக பா.ஜனதா தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே  ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

ஆண்டாள் விவகார சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மீடியாவிற்கு பேட்டியளித்து பேசிய கவிஞர் வைரமுத்து உணர்வுப்பூர்வமான விளக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் என்னுடைய தாய் போன்றவர், அவரை நான் அவமதிக்கவில்லை என குறிப்பிட்டு உள்ளார். 

ஆண்டாளின் தமிழை நான் 40 ஆண்டுகளாக சுவாசித்து வாழ்ந்து வருகிறேன். ஆண்டாளின் மூலம் அந்த கால சமூகத்தையும், சூழலையும் பார்க்கிறேன். ஆண்டாளின் வைஷ்ணவத்தைவிட அவருடைய தமிழால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவருடைய தமிழை மட்டும் நான் கொண்டாடவில்லை. அவர் பெண்களின் ஆளுமைக்காக முதல் குரல் கொடுத்ததையும் கொண்டாடுகிறேன் என குறிப்பிட்டு உள்ளார். சர்ச்சை தொடர்பாக விரிவான விளக்கத்தை அளித்து உள்ள வைரமுத்து, நான் ஆண்டாள் பற்றி 35 அல்லது 40 நிமிடங்கள் பேசினேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. நான் பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி கூறினேன். 

ஆண்டாளை பல்வகையிலும் புகழ்ந்து பாராட்டி நான் பேசினேன். அப்போது ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள வி‌ஷயங்களைப்பற்றியும் கூறினேன். ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன். கடவுளாகவும், கடவுளுக்கு சேவை செய்தவராகவும் கூறப்படும் ஆண்டாளை பற்றி இப்படி அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று மேற்கோள்காட்டி சொன்னேன். ஆராய்ச்சி கட்டுரையில் கூறப்பட்டுள்ள அந்த வார்த்தை தற்போது தவறான அர்த்தத்தில் மாறி இருக்கிறது. அதில் தாசி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது வேறு. ஆனால் இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். நான் இதுபற்றி விரிவாக சொன்னபோதும், அதை புரிந்து கொள்ளவில்லை. அந்த வார்த்தை இப்படி மாறியது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை. 

இதன் மூலப்பொருள் தவறு இல்லை என்றால் நான் மேற்கோள் காட்டி சொன்னது மட்டும் எப்படி தவறு ஆகும் என குறிப்பிட்டு உள்ளார். 

தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிஉள்ள கவிஞர் வைரமுத்து, நான் ஆண்டாளை குறைத்து மதிப்பிட்டோ அல்லது சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ ஆராய்ச்சி கட்டுரை தகவலை மேற்கோள்காட்டவில்லை.  

ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர். ஆண்டாள் தனது தமிழை எனக்கு ஊட்டி என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளார். அப்படி இருக்க நான் எனது தாயை சிறுமைப்படுத்துவேனா? அது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. எல்லோராலும் அதை புரிந்து கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதால் மீண்டும் அவர்கள் என்னை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படலாம். இந்த வி‌ஷயத்தில் அரசியல் தூண்டுதல் இருக்கிறதா? என்பதை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் வேண்டுமென்றே இந்த வி‌ஷயம் திரிக்கப்படுகிறது.

நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். தமிழ் எழுத்தாளர்களும் இதுபற்றி விளக்கி இருக்கிறார்கள். நான் எப்போதுமே உண்மையையே பேசுகிறேன். இந்த வி‌ஷயத்தில் இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான் அவரது பிறந்த ஊரில் சென்று அவரை அவமதிக்கும் வகையில் பேசுவேனா? நான் அவருடைய இலக்கியத்தை பரப்ப வேண்டும் என்று விரும்புகிறவன். இப்போது முதல் முறையாக பகுத்தறிவாளர்களும் ஆண்டாளுடைய பணியை பாராட்டி இருக்கிறார்கள். நான் எப்போதுமே எனது பணியில் உண்மையாக நடந்து கொள்பவன். எனது பக்கம் எப்போதும் நீதி இருக்கும் என கூறிஉள்ளார். 

Next Story