தமிழர்கள் குடும்பமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு சசிகலா வேண்டுகோள்


தமிழர்கள் குடும்பமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு சசிகலா வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Jan 2017 10:52 PM GMT (Updated: 9 Jan 2017 10:52 PM GMT)

சாதி, மதம், இன வேறுபாடு இல்லாமல் தமிழர்கள் குடும்பமாக கொண்டாடும் சிறப்பான பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பமாக கொண்டாடும் பண்டிகை அ.தி.மு.க. பொதுச

சென்னை,

சாதி, மதம், இன வேறுபாடு இல்லாமல் தமிழர்கள் குடும்பமாக கொண்டாடும் சிறப்பான பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடும்பமாக கொண்டாடும் பண்டிகை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

உலகின் மூத்த குடியான தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள், தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை நாளாக இருந்த நிலை மாற்றப்பட்டு, விருப்ப விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த விழா. இந்த விழாவை தமிழர்கள் அனைவரும் குடும்பமாக கொண்டாடி மகிழ விடுமுறை அளிப்பது மத்திய அரசின் கடமை.

கட்டாய விடுமுறை

இந்த ஆண்டு பொங்கல் விழா சனிக்கிழமை அன்று தானே வருகிறது. அது விடுமுறை நாள் தானே என்று ஒதுக்காமல், பொங்கல் விழாவை மதிக்கும் வகையில் அதனை விடுமுறை நாளாக அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் அளிப்பது அவசியம்.

தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மத்திய அரசு உணர்ந்து ஏற்று, உடனடியாக தமிழர்களின் பெருமை மிகு பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்பார்ப்பு–உரிமை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட அரும் முயற்சிகளால் தமிழர்களின் பல்வேறு உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அதைப்போலவே, ஜெயலலிதா வழியில் என்றும் நடைபோடும் தமிழகம், பொங்கல் விழாவுக்கான விடுமுறையை மத்திய அரசு உடனடியாக அறிவித்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும், உரிமையையும் உறுதி செய்யும் என்று காத்திருக்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story