‘‘ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்’’; நடிகர் சங்கம் வற்புறுத்தல்


‘‘ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்’’; நடிகர் சங்கம் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 15 Jan 2017 9:30 PM GMT (Updated: 15 Jan 2017 9:30 PM GMT)

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தி உள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழர்கள் அடையாளம் ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழியினருக்கும் ஒவ்வ

சென்னை,

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தி உள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழர்கள் அடையாளம்

‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழியினருக்கும் ஒவ்வொரு கலாசார அடையாளம் இருக்கிறது. இதையெல்லாம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது. அந்த வகையில் சிந்துவெளி நாகரிக கல்வெட்டில் இருந்து இன்றுவரை ஏறுதழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டு தமிழர்களின் தொன்மை அடையாளமாய் இருந்து வருகிறது.

சட்டத்தின் முன் ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கிறது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதை சட்டத்திற்கு புரியவைத்து நம்மொழி சார்ந்த கலாசாரங்களை வாழவைப்பது அவர்களுடைய கடமையாகிறது. கடவுள், மதம், வாழ்கை, பொருளாதாரம், கலாசாரம், அரசியல் இப்படி எல்லாவற்றுக்கும் தன் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய நம் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

படப்பிடிப்பில் அவமரியாதை

அந்த வகையில் சமீபத்தில் தனது கருத்தை பதிவு செய்த சில நடிகர் நடிகையிடம், படப்பிடிப்பில் சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது. இந்த நேரத்தில் கமல்ஹாசன் தனது வலைபக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அதில் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்பவர்களை எல்லை மீறாமல் விமர்சிக்க வேண்டியதும், அதுவும் பெண்ணாக இருந்தால் கொச்சைப்படுத்தாமல் பதில் விமர்சனம் செய்வதும் கூட தமிழர் மரபு தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழர்களின் மரபு சார்ந்தது ஏறுதழுவல். அவர்களின் உணர்வுகளையும், உள் எழுச்சிகளையும் புரிந்துகொண்டு அது எல்லை மீறுவதற்கு முன் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியேனும், இந்த வருடம் ஏறுதழுவுதலை நடத்தி கொடுக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகிறோம். இதுவே தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும் என்றும் நம்புகிறோம். அதற்காக காத்திருக்கிறோம்.’’  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story