நமது கலாசாரத்திற்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நமது கலாசாரத்திற்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jan 2017 9:15 PM GMT (Updated: 16 Jan 2017 6:33 PM GMT)

நமது கலாசாரத்துக்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தடியடிக்கு கண்டனம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் திரண்டதுடன், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டு மத்திய, மாநில அரசுகளுக்குத் தங்கள் எதிர்ப்பு உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குப் பெயர் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை இன்று(நேற்று) தனித்தீவாக்கி கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டுள்ளதற்கு தி.மு.க. சார்பில் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

புதிய முறையில்...

சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்புக்காக தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழர் கலாசாரப் பெருமைமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை இன்றைய காலத்திற்கேற்ப உத்வேகத்துடனும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது.

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளை மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு தனது கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தின் தற்போதைய அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியமுறையில் அதனை அமைத்து, அதில் தமிழகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.

கோர்ட்டின் அனுமதி

அப்போது தான், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் ‘விலங்குகளை வதை செய்பவையல்ல’ என்பதும் அவை மனிதருக்கும், விலங்குகளுக்கும் காலங்காலமாக உள்ள வாழ்வியல் அடிப்படையிலான உறவை வெளிப்படுத்துபவை என்பதை உணர முடியும். நாட்டு மாடுகளை வளர்க்கவும், பெருக்கவும் வாழ்வியல் முறையிலான அமைப்பு முறையே ஜல்லிக்கட்டு என்பதை உணர்த்தக் கூடியவர்கள் இந்த வாரியத்தில் இடம் பெற வேண்டும். இதன் அடிப்படையில், உரிய பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளத்தைக் காட்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு கோர்ட்டின் அனுமதியைப் பெற முடியும்.

பீட்டா அமைப்புக்கு தடை

இதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உடனடியாக செயல்படுவதுடன், தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாசாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ. நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடைவிதிக்க வேண்டியது அவசியமாகும். இந்தியா எனும் பன்முகதன்மை கொண்ட நாட்டின் பண்பாட்டுக்கூறுகளையும், அவற்றின் தொன்மை அடிப்படை கருத்தியலையும் உணராத வெளிநாட்டு அமைப்புகள் வேறு உள்நோக்கங்களுடன் இந்த மண்ணில் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கடைசியில் அதனைத் தகர்க்கும் போக்கினை மத்திய, மாநில அரசுகள் இனியும் கடைப்பிடிக்காமல், சுப்ரீம் கோர்ட்டின் சட்டப்பூர்வமான அனுமதியுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு இனியேனும் அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story