திவாகரன் பேச்சுக்கு கடும் கண்டனம்: அ.தி.மு.க. என்ற இயக்கம் எந்தவிதத்திலும் கலகலத்து விடக்கூடாது; முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி


திவாகரன் பேச்சுக்கு கடும் கண்டனம்:  அ.தி.மு.க. என்ற இயக்கம் எந்தவிதத்திலும் கலகலத்து விடக்கூடாது; முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2017 8:15 PM GMT (Updated: 16 Jan 2017 8:52 PM GMT)

சசிகலா சகோதரர் திவாகரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. என்ற இயக்கம் எந்த விதத்திலும் கலகலத்து விடக்கூடாது என்று கூறினார்.

காவேரிப்பட்டணம்,

தமிழக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திவாகரன் பேச்சு

தஞ்சாவூரில் நடராஜன் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அவருடைய மைத்துனர் திவாகரன் பேசியுள்ளார். அவர் பேசிய பேச்சு ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனையும், கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளையும் காயப்படுத்தி உள்ளது. அதற்காக நிச்சயமாக அவர் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனிடமும் வருத்தம் தெரிவித்தே ஆக வேண்டும்.

முதலில் ஒரு கருத்தை சொன்னார். அ.தி.மு.க. உருவாக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலை நாங்கள் தான் நடத்தினோம் என சொல்லி இருக்கிறார். அப்போது அவருக்கு என்ன வயது இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள். இவருக்கும், அந்த தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

நாங்கள் தொண்டர்களாக இருந்து அந்த தேர்தலில் பணியாற்றி உள்ளோம். அந்த வெற்றி முழுவதும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு கிடைத்த வெற்றி. அந்த வெற்றியை ஒரு சாதாரண நபர், எந்த வகையிலும் இந்த இயக்கத்திற்கு ஒரு துரும்பு அளவு கூட இணைத்து கொள்ளாத நபர், இந்த இயக்கத்தையே நாங்கள் வழி நடத்தினோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்காக எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

உரிமை கொண்டாடுகிறார்

அ.தி.மு.க 2-ஆக உடைந்த போது எம்.ஜி.ஆரின் துணைவியார் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகி அம்மையார் அவராக, ஜெயலலிதாவிடம் இந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் என சொல்லி, உடைந்த இயக்கத்தை இணைப்பதற்காக இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.

ஏதோ, இவர்கள் குடும்பம் தான் இந்த சின்னத்தை பெற்றுத்தந்ததாக எவ்வளவு பெரிய தவறான தகவலை சொல்கிறார்.

அ.தி.மு.க. ஒரு மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். இதை தொடங்கும் போது ஒரு தொண்டன் ஆரம்பித்த கட்சியில் நான் இணைகிறேன் என்று சொன்னார். எந்த வரலாற்றிலும் இது இருக்காது. பி.எச்.பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் அந்த நேரத்தில் கடுமையாக உழைத்தவர்கள். ஆனால் இவர் (திவாகரன்) தற்போது அந்த இயக்கத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்.

தர்ம சங்கடம்

இன்று முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஜெயலலிதா பொறுப்பை ஒப்படைத்தார். அடக்கத்துடன் ஆட்சி செய்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இன்று பயன்படுத்தி கொண்டு மக்கள் எளிதில் அணுக கூடிய முதல்- அமைச்சராக மாறி இருக்கிறார்.

அதற்கு உதாரணம் வார்தா புயல். அப்போது சக அமைச்சர்களுடன், அதிகாரிகளுடன் இணைந்து அந்த புயலின் தாக்கத்தை விரைவில் தூக்கி எறிந்து மக்களை சகஜ வாழக்கைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அதே போல சென்னையில் குடிநீர் பிரச்சினை வருகிறது என்பதை அறிந்த உடனே, எந்த வித ஈகோவும் பார்க்காமல் ஆந்திர முதல்-மந்திரியிடம் நேரடியாக சென்று தண்ணீர் வேண்டும் என கேட்டார். அதன்படி கூடுதலாக 2.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவு பிறப்பித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதிகார மையம்

இவ்வாறு எளிமையான நடைமுறையை கொண்டுள்ள ஒரு முதல்-அமைச்சர் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவருக்கு ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்று இவர் (திவாகரன்) கருதுகிறார். இது தேவையில்லாத ஒன்று. இவரது பேச்சு இன்று பொறுப்பேற்றுள்ள கழக பொதுச்செயலாளருக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை உருவாக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

என்ன தியாகம் செய்து விட்டீர்கள். நீங்கள் முதலில் இந்த கட்சியிலேயே இல்லை. ஜெயலலிதா ஏற்கனவே உங்களை கட்சியில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். கட்சியிலேயே இல்லாத ஒரு நபர் இன்று இந்த இயக்கத்தை காப்பாற்றுவேன் என்று ஒரு அதிகார மையத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

வருத்தம் தெரிவிக்க வேண்டும்

நான் ஒரு அ.தி.மு.க. தொண்டன் என்ற நிலையில் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தல்ல. என்னை போன்ற லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. திவாகரன் தான் பேசிய பேச்சுக்காக ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனிடமும் தனது வருத்தத்தை தெரிவித்து கொள்ள வேண்டும். இனிமேல் இது போன்ற அடாவடித்தனமான பேச்சை பேசி அ.தி.மு.க. தொண்டர்களை பயமுறுத்துவதாகவோ, அல்லது அ.தி.மு.க. தொண்டர்களை தன் வசம் இழுப்பதற்காக வேறுவிதமான நடவடிக்கையிலோ ஈடுபடக்கூடாது. இது ஒரு தொண்டனின் எச்சரிக்கையாக கூறுகிறேன்.

அனுமதிக்க மாட்டோம்

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, 1½ கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க. என்ற இந்த இயக்கம் எந்த விதத்திலும் கலகலத்து விடக்கூடாது. மாசுபட்டு விடக்கூடாது. பல்வேறு வருத்தங்கள், சோகங்கள் இருந்தாலும் எங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு யார் தலைமை பொறுப்பு ஏற்றாலும் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு பணியாற்றி வருகிறோம்.

அதற்காக இவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக தவறான கருத்துகளை சொல்லி எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதை அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக இன்றைய பொதுச்செயலாளரை அவர்கள் சங்கடத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் தவிர்க்க வேண்டும். அதை தவிர்ப்பதற்கு உரிய சூழலை இன்றைய பொதுச்செயலாளர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story