ஜெயலலிதாவின் சொத்துக்காக அரசியலுக்கு வரவில்லை ; தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். தீபா சொல்கிறார்


ஜெயலலிதாவின் சொத்துக்காக அரசியலுக்கு வரவில்லை ; தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். தீபா சொல்கிறார்
x
தினத்தந்தி 17 Jan 2017 10:11 AM GMT (Updated: 17 Jan 2017 10:11 AM GMT)

ஜெயலலிதாவின் சொத்துக்காக அரசியலுக்கு வரவில்லை அவர் பயன்படுத்திய ஒரே ஒரு பேனா மட்டும் கொடுங்கள் எனக்கு அது போதும் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என தீபா கூறி உள்ளார்.

சென்னை,

தீபா இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா மரணம் பற்றி அவர் குடும்பத் தினர் யாரும் ஆட்சேபம் சொல்லவில்லை என்று ஐகோர்ட்டு கூறியுள்ளதே?
பதில்:- எனது சகோதரர் தீபக் 70 நாட்கள் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே அம்மா மரணம் தொடர்பாக வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.
 
கே:- ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று பரவலாக பேசப்படுகிறதே?
ப:- இது மக்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனது சுற்றுப் பயணத்தின் போது மக்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்க உள்ளேன். அதன் பின்னரே இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.
 
கே:- உங்களின் சொந்த அத்தை என்ற முறையில் அவரது சொத்துக்களை நீங்கள் எதிர் பார்க்கவில்லையா?

ப:- அது போன்ற எதிர்பார்ப்புகள் எதுவும் என்னிடம் இல்லை. அவர் வாங்கிய பெயரை வாங்க வேண்டும்.
அவர் பயன்படுத்திய ஒரே ஒரு பேனா மட்டும் கொடுங்கள் எனக்கு அது போதும்.

கே:- எந்தவித அனுபவமும் இல்லாமல் அரசியலுக்கு வருகிறீர்களே? உங்களால் வெற்றி பெற முடியுமா?

ப:- அரசியலுக்கு வருவதற்கு அனுபவம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. படித்தவர்கள், புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். எனவே எந்த அடிப்படையில் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை.

கே:- பா.ஜ.க. சார்பில் உங்களிடம் யாராவது தொடர்பில் இருக்கிறார் களா? பேசினார்களா?

ப:- என்னிடம் யாரும் அது போன்று எந்த தொடர்பிலும் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் உள்ள சிலர் உங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- அதுபோன்று யாரும் என்னிடம் பேசவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் தான் என் வீட்டு முன்பு தினமும் கூடுகிறார்கள்.

கே:- எங்கள் குடும்பம்தான் ஜெயலலிதாவை காத்து வந்ததாக திவாகரன் கூறியுள்ளாரே?

ப:- எந்த அடிப்படையில் இது போன்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை என்னால் ஏற்க இயலாது.

கே:- அ.தி.மு.க. தலைமையை விரும்பாத தொண்டர்களே உங்களைத் தேடி வருகிறார்கள். ஆனால் அது பற்றி நீங்கள் வெளிப்படையாக பேசாதது ஏன்?

ப:- என்னைத் தேடி வந்துள்ள மக்களிடம் இன்னும் நிறைய கருத்துக்களை கேட்க வேண்டியதுள்ளது. இப்போதுதானே நாம் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.

கே:- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதை ஏற்கிறீர்களா?

ப:- நான் எனது வழியில் பயணிக்க விரும்புகிறேன். மக்கள் ஆதரவுடன் அந்த பயணம் இருக்கும்.
 

கே:- உங்களது பதில்களில் தெளிவான, உறுதியான கருத்துக்கள் இல்லையே? உங்கள் அத்தையை போன்று சொல்ல வந்ததை தெளிவாக உறுதியாக சொல்ல வேண்டியதுதானே?

ப:- அவரைப் போலவே இருக்கிறேன் என்பதற்காக அவரது செயல்பாடுகள் போல என்னிடமும் எதிர்பார்க்க முடியாது. இப்போதுதானே வந்துள்ளேன்.

கே:- தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக நடிகர் ரஜினி கூறி உள்ளாரே?

ப:- நான் ஏற்கனவே கூறியது போல அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவரவர் விருப்பம்.

கே:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப:-தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். அது ஆர்.கே.நகர் தொகுதி தானா என்பதை இப்போது சொல்ல முடியாது.

இவ்வாறு தீபா கூறினார்.

தீபா பேட்டியின் போது சசிகலா பற்றி நிருபர்கள் சரமாரியாக பல கேள்விகள் கேட்டனர். ஆனால் சசிகலா பற்றி நேரடியாகவோ, சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலோ எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை.

தீபா வசிக்கும் வீடு முன்பு இன்று அதிகமான அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தீபாவை வாழ்த்தி கோஷம் போட்டபடி இருந்தனர்.
அ.தி.மு.க.வினர் வருகை காரணமாக அந்த தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Next Story