அலங்காநல்லூர் போராட்டத்திற்கு சரத்குமார், சீமான், அமீர், ஜி.வி.பிரகாஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு.


அலங்காநல்லூர் போராட்டத்திற்கு சரத்குமார், சீமான், அமீர், ஜி.வி.பிரகாஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு.
x
தினத்தந்தி 17 Jan 2017 12:16 PM GMT (Updated: 17 Jan 2017 12:16 PM GMT)

அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டத்திற்கு சரத்குமார், சீமான், அமீர், ஜி.வி.பிரகாஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் நேரில் வந்து ஆதரவுதெரிவித்து உள்ளனர்.

சென்னை

அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக  கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும்  ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 சென்னை மற்றும் புதுச்சேரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அலங்கார் வாடிவாசல் அருகில் தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலைந்து மறுத்து, இரவில் சமையல் செய்து சாப்பிட்டு, அங்கேயே தங்கினர். அதைத்தொடர்ந்து கலெக்டர் வீரராகராவ் அலங்காநல்லூர் வந்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் இன்று அதிகாலை கல்லூரி மாணவர்கள், மாடுபிடிவீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பெண்கள் உள்பட சுமார் 230 போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். அவர்களை வாடிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும் இன்று காலை அலங்காநல்லூர் கிராமமக்கள் சுமார் 500 மேற்பட்டோர் பெரியாறு கால்வாய் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

கடந்த 21 மணி நேரமாக ஜல்லக்கட்டு நடத்த அனுமதிகோரி அலங்காநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பின்னர் போலீசார் 10 நிமிட அவகாசம் கொடுத்தனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்

இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் அணி அணியாக திரண்டு அலங்காநல்லூர் வந்தனர். அங்குள்ள வாடிவாசல் அருகே பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், கைதான இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.  அவர்கள் மீதான   வழக்கை வாபஸ்  பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த  போலீஸ் சூப்பிரண்டு, கைதானவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொதுமக்கள்  ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 நிமிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.தொடர்ந்து பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அலங்காநல்லூரில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து  நடிகர் மயில்சாமி யு- டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது போல் இயக்குநர்கள் சீமான், அமீர்,கார்த்திக் சுப்புராஜ் , நடிகர் சரத்குமார், இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஆகியோர் அலங்காநல்லூரில் முகாமிட்டுள்ளனர்.


Next Story