அ.தி.மு.க.வை எந்த விதத்தில் உடைக்க முயன்றோம் என்பதற்கான ஆதாரத்தை சொல்ல தயாரா? நடராசனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி


அ.தி.மு.க.வை எந்த விதத்தில் உடைக்க முயன்றோம் என்பதற்கான ஆதாரத்தை சொல்ல தயாரா? நடராசனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
x
தினத்தந்தி 17 Jan 2017 4:45 PM GMT (Updated: 17 Jan 2017 1:29 PM GMT)

அ.தி.மு.க.வை எந்த விதத்தில் உடைக்க பா.ஜனதா முயன்றது என்பதற்கான ஆதாரத்தை சொல்ல தயாரா என்று நடராசனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி விடுத்தார்.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆதாரத்தை சொல்லட்டும்

தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கி.. பொங்கி.. பா.ஜ.க.வை தாக்கி இருக்கிறார் சகோதரர் நடராசன். ஆவியை பார்த்து பயப்படுவதை போலவே காவியை பார்த்து பயப்படுவதாக எண்ணி காவி மயமாக்கப்படுகிறது என்றும் கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல அ.தி.மு.க.வை உடைக்கப் பார்க்கிறது, குழப்பம் விளைவிக்க பார்க்கிறது மத்திய அரசு, பா.ஜ.க.வை இங்கு வளர விடமாட்டோம் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார்.

ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் இப்படி அரண்டுபோய் பேசுகிறது என்று எனக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்ல எந்த விதத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் உடைக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் அவர்களின் உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிடுகிறோம் என்பதற்கான ஆதாரங்களை சொல்லிவிட்டு அவர் இந்த குற்றச்சாட்டை சொல்லட்டும்.

சுயலாபம் பெற முயற்சியா?

ஜனநாயக முறைப்படி அந்த கட்சியில் எந்த குழப்பமும் வந்துவிட கூடாது என்ற காரணத்திற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்த அந்த நடு இரவே கவர்னர் அவர்களுக்கான பதவி பிரமாணத்தை செய்துவைத்தார். குழப்பம் வந்துவிட கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான், குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றால், சுயலாபம் பெற வேண்டும் என்றால் அன்றே அது பா.ஜ.க.வால் பெற்று இருக்க முடியும்.

அதுமட்டுமல்ல, இப்படி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அந்த கட்சியின் அடிப்படையில் எந்த அதிகாரமும் இல்லாத நடராசன் எப்படி சொல்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்ல, முதல்–அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உண்மையான அன்போடு நட்பு பாராட்டிய மோடி குழப்பம் விளைவித்தாரா?, இல்லையென்றால் நடையை கட்டுங்கள் என்று சொன்ன நடராசர்கள் குழப்பம் விளைவித்தார்களா? என்பது அந்த கட்சியில் தொண்டர்களுக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.

குழப்பம் யாரால் ஏற்பட்டது?

பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக நீடிக்கலாம் என்று சொல்கிறார். அதிகாரப்பூர்வமான ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் அதைத்தான் சொல்கிறது. ஆனால் பன்னீர்செல்வம் நீடிக்கலாம் என்று சொன்னால் முதல்–அமைச்சர் நீடிப்பதை பற்றிய முடிவையே இவர் எடுப்பதை போலவே பேசுகிறார் என்றால், குழப்பம் யாரால் ஏற்பட்டு இருப்பது என்பதை மக்கள் நன்றாக உணர்வார்கள்.

ஏன் இன்று பா.ஜ.க.வை பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள். முற்றிலுமாக அவர்களின் பொங்கல் விழா நோக்கமே பா.ஜ.க.வை குறிவைத்து பேசுவது என்பதே பா.ஜ.க. தமிழகத்தில் அவர்களுக்கு சவாலாக இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எங்களை பொறுத்தமட்டில் தமிழகத்தை வளர்ச்சி மயமாக்க வேண்டும். அதற்கு, எங்களை வளர்த்து, எங்களை வளர்ச்சி அடைய செய்து, எங்கள் கட்சியை உறுதியாக்கி நாங்கள் அதை அடைவோமே தவிர, இன்னொரு கட்சியை உதிரவைத்து, அதை அடைவதற்கான அவசியம் பா.ஜ.க.விற்கு இல்லை.

பா.ஜ.க.வுக்கு ஆதரவு

நூற்றாண்டை கொண்டாடும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தால் அவர் பா.ஜ.க.வை தான் ஆதரித்து இருப்பார். ஏன் ஜெயலலிதா இருந்தாலும்கூட இன்று பா.ஜ.க.வை தான் ஆதரித்து இருப்பார். ஏன் இன்று பா.ஜ.க.வை பார்த்து இவர்கள் இப்படி பரிதவிக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், பா.ஜ.க.வின் உண்மை தன்மையை விளக்க வேண்டியது எனது கடமை என்பதற்காகவே நான் இந்த பதில் அறிக்கையை தருகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story