10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவுடன் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் பேச்சுவார்த்தை தொடங்கினர்


10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவுடன் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் பேச்சுவார்த்தை தொடங்கினர்
x
தினத்தந்தி 17 Jan 2017 8:20 PM GMT (Updated: 17 Jan 2017 8:20 PM GMT)

சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் 10 பேர் கொண்ட குழுவுடன் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளனர்.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி மதுரை அலங்காநல்லூர் உள்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் சமூக வலைத்தளம் மூலம் இந்த போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை 9.30 மணியளவில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடினர்.

அவர்கள் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும், ஒவ்வொரு கிராமத்திலும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி, அதில் நாட்டு மாடு இனங்களை பாதுகாப்போடு வளர்க்க வேண்டும்.

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தடியடி நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் 10 பேர் கொண்ட குழுவுடன் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் போராட்டத்தினை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Next Story