சொகுசு கார் இறக்குமதி வழக்கு: நடிகை சுஷ்மிதா சென் சென்னை கோர்ட்டில் ஆஜர்


சொகுசு கார் இறக்குமதி வழக்கு: நடிகை சுஷ்மிதா சென் சென்னை கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 18 Jan 2017 9:45 PM GMT (Updated: 18 Jan 2017 9:45 PM GMT)

சொகுசு கார் இறக்குமதி வழக்கு தொடர்பாக நடிகை சுஷ்மிதாசென் சென்னை கோர்ட்டில் ஆஜரானார்.

சென்னை,

நடிகை சுஷ்மிதா சென்

முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென் கடந்த 2005–ல் மும்பையை வியாபாரி ஒருவர் மூலமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய ‘லேண்ட்–க்ரூஸர்’ கார் ஒன்றை ரூ.55 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்தக்கார் 2004 மாடல் என சென்னை துறைமுகத்தில் போலியாக கணக்கு காட்டி இறக்குமதி செய்தது மட்டுமல்லாமல், வரிஏய்ப்பு செய்திருப்பதையும் சுங்க இலாகா துறையினர் கண்டு பிடித்தனர். இதுதொடர்பாக காரை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக, மும்பையைச் சேர்ந்த ஹரன் சோக்சே மற்றும் வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான 2–வது பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு சுங்க இலாகா தரப்பு சாட்சியமாக நடிகை சுஷ்மிதா சென், நீதிபதி ஜாகீர் உசேன் முன்பாக ஆஜராகி, தனக்கும் இந்த இறக்குமதி தொடர்பான வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பழைய கார் என்று எண்ணி தான் ரூ.55 லட்சத்திற்கு வாங்கினேன். அதில் நடந்த மோசடி எதுவும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிய வந்ததால் வித்தியாசத் தொகை ரூ.22 லட்சத்தை முறையாக செலுத்தி விட்டேன்’’ என்றார்.

7–ம் தேதிக்கு தள்ளிவைப்பு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுஷ்மிதா சென்னிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். அதையேற்று நீதிபதி விசாரணையை பிப்ரவரி 7–ம் தேதிக்கு தள்ளி வைத்தார். சாட்சியம் அளிக்க கோர்ட்டிற்கு வந்த சுஷ்மிதா சென்னிடம் கோர்ட்டு ஊழியர்கள் ஆவலோடு போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது அவரிடம் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய போது, பதில் ஏதும் தெரிவிக்க விரும்பாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.

Next Story