ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது


ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றினாலே போதுமானது
x
தினத்தந்தி 19 Jan 2017 9:42 AM GMT (Updated: 19 Jan 2017 9:42 AM GMT)

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் (ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்சநீதிமன்றத்தினால் ஒன்றும் செய்ய இயலாது.

சென்னை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறும் யோசனையாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் (ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்சநீதிமன்றத்தினால் ஒன்றும் செய்ய இயலாது.

மாடு பிடி விளையாட்டுக்காக கிராம சபை கூட்டி தீர்மானித்தால் மத்திய-மாநில அரசு சட்டங்களால் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதை சட்டம் அறிந்தோர் சரிபார்த்து சொல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பார்த்திபனின் இந்த யோசனை சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இவருடைய இந்த யோசனையால் மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  

மூத்த பத்திரிகையாளர் ஷியாம் தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில்,  இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார் .பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டவர். அவரிடம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரினால் எப்படி கிடைக்கும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த கிராம சபைக்கு முழு அதிகாரம் உள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்துவதால் கிராம சபைக்கு உச்ச நீதிமன்றத்தால் எந்த சிறைத் தண்டனையும் கொடுக்க முடியாது. அபராதம் மட்டுமே விதிக்க முடியும். எனவே, நம்மிடம் இருக்கும் கிராம சபை எனும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

 பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம சபைகள் மிகுந்த சக்திவாய்ந்தவை. ஊராட்சி மன்றத் தலைவரை விட அதிக அதிகாரம் மிகுந்தவை.

அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் கோழிப் பண்ணைக்கு எதிரான எங்கள் போராட்டங்களில் கிராமசபையை பயன்படுத்தியே நீதிமன்றத்தில் வழக்குகளை வென்றோம்.  நிரந்தரத் தடை வாங்கினோம்.

கேரளாவில் ப்ளாச்சிமாடா பஞ்சாயத்து கிராமசபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே கேரள உயர்நீதிமன்ற உத்திரவு மூலம் கோகோ கோலா ஆலையை மூடியது (பிறகு உச்சநீதிமன்றம் ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்துவிட்டது)

அலங்காநல்லூர் ஊராட்சி கிராமசபை தீர்மானம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்யலாம். சட்டமன்றம், நாடாளுமன்றத்தை விட உள்ளூர் விவகாரங்களில் கிராமசபைக்கு அதிகாரம் அதிகம்.

உள்ளூர் விவகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட உள்ளூர் மக்களே திறம்படக் கையாளமுடியும், அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே கிராமசபைக்கு பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல 18வயது நிரம்பிய அனைவரும் கிராமசபையின் உறுப்பினர்கள்.

ராஜீவ்காந்தியின் கனவு திட்டம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் தங்கள் அருகிலேயே இருக்கும் அதிகாரத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

Next Story