மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
x
தினத்தந்தி 19 Feb 2017 8:00 PM GMT (Updated: 19 Feb 2017 8:00 PM GMT)

மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (20–ந் தேதி) முதல் 6 நாட்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அதிகாரப்போட்டி

தமிழக முதல்–அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.தி.மு.க.வில் சசிகலா தலைமையில் ஒரு பிரிவு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவு என பிளவுபட்டு கட்சிப் பொறுப்பு, ஆட்சி பொறுப்பை கைப்பற்றும் அதிகாரத்திற்கான போட்டியில் இறங்கினர்.

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினைத் தொடர்ந்து சசிகலா சிறை சென்ற நிலையில் சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அமைச்சரவை அமைக்கப்பட்டு சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நலன் எள்ளளவும் கிடையாது

இந்தக் கூட்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெறாத, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஜனநாயக நடைமுறைக்கு புறம்பான – சபாநாயகர் மீதான தாக்குதல்கள், மைக்குகள்–சேர்கள் உடைப்பு, ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டது, சபாநாயகர் இருக்கையில் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து ஆட்டம் போட்டது உள்ளிட்டவை நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் சட்டப்பேரவையில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. நடந்து கொண்டதா? என்ற கேள்வியை தமிழக மக்களிடம் எழுப்பியுள்ளது. இவையெல்லாம் அறவழிப் போராட்டம் என்று நம்பச் சொல்கிறது தி.மு.க..

அதிகாரப்போட்டியால் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி, அங்கீகாரமற்ற அதிகாரத்திற்கு ஏங்கி கவர்னரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது பா.ஜ.க.. கிரானைட் மலைகளை விழுங்கியது, தாது மணலை கடத்தியது, ஆற்று மணலை தின்பது என இயற்கை வளக் கொள்ளைகளையும், அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் ஊழல் ததும்பி வழிகிறது. அடி முதல் நுனி வரை லஞ்சமின்றி எதுவும் நடக்காது என்ற நிலைமை உள்ளது. இதனை உரம்போட்டு வளர்த்ததற்கு அ.தி.மு.க.வும், தி.மு.க.வுமே பொறுப்பாகும். இவர்களுக்கு தமிழக மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.

மக்கள் சந்திப்பு இயக்கம்

அ.தி.மு.க.வின் அதிகாரப்போட்டி, தி.மு.க.வின் அதிகார வேட்கை, பா.ஜ.க.வின் புறக்கடை முயற்சி போன்றவற்றால் தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளின் தற்கொலை–அதிர்ச்சி மரணம், தமிழகம் முழுவதும் குடிநீருக்கு ஏற்பட்டிருக்கும் பஞ்சம், வறட்சியால் இடம்பெயர்தல், கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின்படி வேலையளிக்காதது, வேலை செய்தவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் இருப்பது, ரே‌ஷன் பெறும் உரிமை மறுப்பது, நகரங்களிலும், கிராமங்களிலும் தீவிரமாகி வரும் வேலையின்மை, ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இவை எல்லாம் ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படவே இல்லை.

இந்நிலையில், தமிழக அரசு, மக்கள் எதிர்கொண்டுள்ள உடனடி பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும், சட்டப்பேரவையை ஜனநாயகப்பூர்வமாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 20–ந் தேதி (இன்று) முதல் 25–ந் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தவுள்ளது.

இதற்காக நடைபெறும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் இதர இயக்கங்களில் தமிழக மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story