2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம் தொழிலாளி கழுத்தை இறுக்கிக் கொலை முதல் மனைவி கைது


2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம் தொழிலாளி கழுத்தை இறுக்கிக் கொலை முதல் மனைவி கைது
x
தினத்தந்தி 19 Feb 2017 8:02 PM GMT (Updated: 19 Feb 2017 8:02 PM GMT)

2-வது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் தொழிலாளியை கழுத்தை இறுக்கிக் கொலை செய்த முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு,

2-வது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் தொழிலாளியை கழுத்தை இறுக்கிக் கொலை செய்த முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

கார்வார் மாவட்டம் பட்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆஜாத் நகரை சேர்ந்தவர் முகமது நாசீர் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேஷ்மா கானம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது நாசீர், ரேஷ்மா கானத்துக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் அவர் 2-வது மனைவியுடன் வேறொரு வீட்டில் வசித்து வந்தார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரேஷ்மா கானம், முகமது நாசீரிடம் கேட்டுள்ளார். மேலும் தான் இருக்கும்போது எப்படி வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்யலாம் என்றும் ரேஷ்மா கானம், முகமது நாசீரிடம் தகராறு செய்து வந்தார்.

கழுத்தை இறுக்கிக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினமும் இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ரேஷ்மா கானம், வீட்டில் இருந்த சுடிதார் துப்பட்டாவால் முகமது நாசீரின் கழுத்தை இறுக்கினார். இதில், முகமது நாசீர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், முகமது நாசீர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பட்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் முகமது நாசீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் மனைவி கைது

போலீஸ் விசாரணையில், முகமது நாசீர் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவருடைய 2 மனைவிகள் மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது முகமது நாசீரின் முதல் மனைவி ரேஷ்மா கானத்தின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் 2-வது திருமணம் செய்த ஆத்திரத்தில் முகமது நாசீரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் ரேஷ்மா கானத்தை கைது செய்தனர். இதுகுறித்து பட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2-வது திருமணம் செய்த ஆத்திரத்தில் கணவனை மனைவியே கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story