மக்கள் விரோத ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்: அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே நம் லட்சியம்


மக்கள் விரோத ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்: அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே நம் லட்சியம்
x
தினத்தந்தி 19 Feb 2017 10:45 PM GMT (Updated: 19 Feb 2017 8:12 PM GMT)

மக்கள் விரோத ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே நம் லட்சியம் என்றும் ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.

சென்னை,

ஜெ.தீபா

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24–ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் ஆதரவு அளித்தனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த 14–ந்தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஜெ.தீபா இணைந்தார். அ.தி.மு.க.வின் இரு கரங்களாக நாங்கள் செயல்படுவோம் என்று அப்போது அவர் முழங்கினார்.

இதற்கிடையில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெ.தீபா தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அவ்வப்போது மக்களின் கருத்துகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெ.தீபா அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

நம் லட்சியம்

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் (ஆதரவாளர்கள்) அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த மக்கள் விரோத ஆட்சியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதா வழியில் நல்லாட்சி மலர செய்வோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணி செய்வோம்.

தமிழக மக்களையும், அ.தி.மு.க.வையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவதே நம் ஒரே லட்சியமாக இருக்கும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடும், தமிழ் மக்களும் என் இரு கண்கள் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.

ஜெயலலிதாவின் பெயரை...

ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியவர்களை அந்த இடத்தில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதாவின் பெயரை ஓங்க செய்திடுவோம்.

மக்களுக்காக நான் என்று சொன்னது மட்டுமில்லாமல் இறுதிவரை உறுதியாக பணியாற்றிய ஜெயலலிதாவின் வழியில் தான் நாம் பயணிப்போம். அதில் எந்தவித மாற்றமும் இருக்காது. உங்களுக்காக (ஆதரவாளர்களுக்காக) நான் இருக்கிறேன். கவலை வேண்டாம்.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story