சட்டசபை விடுதியில் முடங்கினார்கள் தொகுதிக்கு செல்ல தயங்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்


சட்டசபை விடுதியில் முடங்கினார்கள் தொகுதிக்கு செல்ல தயங்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 19 Feb 2017 9:11 PM GMT (Updated: 19 Feb 2017 9:11 PM GMT)

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 98 பேர் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலேயே முடங்கியுள்ளனர்.

சென்னை,

தொகுதி பக்கம் செல்ல அவர்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்கின்றனர்.

சொகுசு விடுதி

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக, கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா அணியை சேர்ந்த 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கினர். அவர்களை தொகுதிக்கு செல்ல அனுமதிக்காமல் கட்டாயப்படுத்தி சிறை வைத்ததாக தகவல் வெளியானது.

கடந்த 10 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக சட்டசபையில் நேற்றுமுன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். கூவத்தூரில் இருந்து நேராக அழைத்து வரப்பட்ட அவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணியை சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர்.

முடக்கம்

இந்தநிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று முன்தினமே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே ‘தொகுதி மக்களுடைய கருத்துகளை கேட்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்து சசிகலா அணியை ஆதரித்ததற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு சரியான பாடம் புகட்டுவோம். அவர்களை தொகுதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிப்போம்’ என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

இதனால், தொகுதி பக்கம் செல்லவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே தங்கிய கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லலாம் என்றால், அந்த விடுதியும் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. எனவே, மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் முடங்கிப் போய் இருக்கின்றனர்.

98 எம்.எல்.ஏ.க்கள்

நேற்று மாலை மட்டும் 98 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அங்கு தங்கி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், கூவத்தூர் சொகுசு விடுதியில் பாதுகாப்புக்கு நின்ற ஒரு சிலரை அங்கே காண முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

இங்கு மட்டும் அல்லாமல், அமைச்சர்கள் வீடுகளிலும் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, தங்கள் மாவட்ட அமைச்சர்களின் உதவியை அவர்கள் நாடிச் சென்றிருப்பதாகவும் அறியப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

தொகுதிக்கு செல்ல அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. தொகுதி பக்கம் தாங்கள் செல்ல வேண்டும் என்றால், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடைய வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. இது தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்துள்ளது. இதையடுத்து சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள சபாநாயகர் ப.தனபால் இல்லத்துக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story