ஜெயலலிதா அறையில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு முதல்வர் பணியை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி


ஜெயலலிதா அறையில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு  முதல்வர் பணியை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 20 Feb 2017 7:28 AM GMT (Updated: 20 Feb 2017 10:50 AM GMT)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு முதல்வர் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

சென்னை,

தமிழகத்தின் புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர் களும் பதவி ஏற்றனர். இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட் கிழமை) மதியம் 12.30 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். முதல்வரான பிறகு முதன் முதலாக வந்த அவருக்கு அரசு உயர் அதி காரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரின் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அறையை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தியதே இல்லை. அவர் தனது அறையில் இருந்தபடியே முதல்வர் பணியை செய்து வந்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி இன்று ஜெயலலிதா பயன்படுத்திய அதே அறை, அதே மேஜை நாற்காலியை பயன்படுத்தினார். 10.35 மணிக்கு ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலியில் அமர்ந்து அவர் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 திட்டங்களுக் கான கோப்புகளில் கையெழுத்திட்டார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் முதல் கோப்பை எடுத்துக் கொடுத்ததும், கும்பிட்டு வணங்கி விட்டு அவர் தன் முதல் கையெழுத்தை போட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றவும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி, அவர் தம் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும்,  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டு அத்திட்டங்களைச் செயல்படுத்திட ஆணையிட்டார்.

அந்த  ஐந்து கோப்புகளின் விவரம் பின் வருமாறு:-

1. மகளிர், பணியிடங்களுக்கும் பிறவேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க ஐம்பது சதவீத மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ஐம்பது சதவீத மானியம் அல்லது அதிக பட்சமாக ரூபாய் இருபதாயிரம் வழங்கப்படும்.  

மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத் திருந்த புரட்சித் தலைவி அம்மாவின் நினைவாக இத்திட்டம் “அம்மா இரு சக்கரவாகனம் திட்டம்”என அழைக்கப்படும். ஆண் டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

2. ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்து லட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க புரட்சித்தலைவி அம்மா ஆணையிட்டார். உலக நாடுகளின் நிலையையொத்த பேறுகால குறியீடு களை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறுகால தாய்சேய் இறப்பு விகி தத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

அதனை நிறைவேற்றும் வகையில் டாக்டர் முத்து லட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டு அதற்கான கோப்பில் முதல்-அமைச்சர் கையப்பமிட்டார். இத் திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்குசுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயனடைவர். ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல் படுத்தும்.

3. தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல் படுத்தப்படும் என்று அம்மா அறிவித்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது.  

இதன் தொடர்ச்சியாக,தமிழ் நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டு அதற்கான கோப்பில் முதல்-அமைச்சர் கையொப்பமிட்டார்.   இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள்கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். 85 கோடி ரூபாய் செலவினத்தில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

4. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என அம்மா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்.  மேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப் படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 100லிருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 150 ருந்து ரூபாய் 300ஆக உயர்த்தியும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 200லிருந்து ரூபாய் 400 ஆக உயர்த்தியும், பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 300லிருந்து ரூபாய் 600 ஆகவும் உயர்த்தியும் ஆணையிட்டு அதற்குரியகோப்பில் முதல்- அமைச்சர்  கையெழுத்திட்டார்.  

இத்திட்டத்தின் மூலம் தற்போது உதவித் தொகை பெற்று வரும் 55,228 இளைஞர்கள் உயர்த்தப் பட்ட உதவித் தொகை பெற்றுபயன் பெறுவர்.  இத்திட்டத்தை செயல்படுத்துவதனால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

5. மது விலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மது விலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புரட்சித் தலைவி அம்மா 500 மதுபானக் கடைகளை மூடியும், மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் 24.5.2016 அன்று ஆணையிட்டார். மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக் கடைகளை மூடுவதற்கான ஆணையிட்டு, அதைச் செயல் படுத்தும் வகையில் அக் கோப்பில் கையொப்பமிட்டார்.

அம்மா  காட்டிய வளர்ச்சிப் பாதையில் செல்லும்  தமிழ்நாடு அரசு, தொடர்ந்து அப்பாதையில் சென்று தமிழ்நாடு பீடுநடை போடுவதை உறுதிப் படுத்தும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவி யேற்றவுடன் மேற்கண்ட சீரிய திட்டங்களை செயல்படுத்த அதற்கான கோப்புகளில்  முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கையப்பமிட்டார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்து போட்டு முடித்ததும் அங்கு திரண்டிருந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story