எண்ணூர் சிறுமி கொலையில் கள்ளகாதலனுடன் பக்கத்து வீட்டு பெண் கைது


எண்ணூர் சிறுமி கொலையில் கள்ளகாதலனுடன் பக்கத்து வீட்டு பெண் கைது
x
தினத்தந்தி 20 Feb 2017 8:06 AM GMT (Updated: 20 Feb 2017 8:06 AM GMT)

எண்ணூர் சிறுமி கொலையில் பக்கத்து வீட்டு பெண் நகைக்காக சிறுமியை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது அவர் கைது செய்யபட்டார்.


சென்னை

எண்ணூர், சுனாமி குடியிருப்பு 26-வது பிளாக்கில் வசித்து வருபவர் பழனி. இவரது 3 வயது மகள் ரித்திகா.நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரித்திகா திடீரென மாயமானாள். இந்த நிலையில் நேற்று காலை திருவொற்றியூர், மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.

அவளது வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு இருந்தது. வாயும் துணியால் கட்டப்பட்டு காணப்பட்டது.சிறுமி கொலையுண்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் மணலி விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.

நேற்று மாலை சிறுமியின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அஞ்சலி செலுத்தினார். அப்போது கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதையடுத்து கொலை யாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ரித்திகா ஒரு பவுனில் தங்க செயின், கம்மல், வெள்ளி கொலுசு, வெள்ளிக் கொடி அணிந்து இருந்தாள். அவளது உடல் மீட்கப்பட்ட போது நகைகள் இல்லை.
எனவே நகைக்காக சிறுமியை கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

சிறுமி ரித்திகா கடைசியாக எதிர்வீட்டில் வசிக்கும் ரேவதியின் வீட்டில் இருந்துள்ளார். அங்கிருந்து தான் மாயமாகியுள்ளார். இதுகுறித்து எண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் குப்பை கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலில் நகைகள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள, பொதுமக்கள் மணலி விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணையில் ரித்திகா எதிர்வீட்டில் உள்ள ரேவதி என்ற பெண்ணின் வீட்டில் விளையாடியது தெரியவந்தது. எனவே ரேவதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ரேவதி தனது கள்ளக்காதலன் ராஜேசுடன் சேர்ந்து சிறுமி ரித்திகாவை கொலைசெய்தது தெரியவந்தது.

ரேவதி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு 3 வயதில் கமலி என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரேவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அடிக்கடி ரேவதியின் வீட்டுக்கு வந்து செல்வார்.

சிறுமி ரித்திகாவும் ரேவதியின் குழந்தை கமலியுடன் விளையாடுவதற்காக ரேவதியின் வீட்டுக்கு அடிக்கடி செல்வாள்.

நேற்று முன்தினம் மாலையிலும் ரித்திகா ரேவதியின் வீட்டுக்கு சென்றாள். அப்போது  ரித்திகா அணிந்திருந்த நகைகள் மீது ரேவதி கண்வைத்தார். அந்த நகைகளை தனது வீட்டில் வைத்தே அவர் கழற்றி எடுத்தார். இந்த நேரத்தில் ரேவதியின் கள்ளக்காதலன் ராஜேசும் வீட்டில் இருந்தார். அவர் மது அருந்தி இருந்தார்.

போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்ட ராஜேஷ் சிறுமி ரித்திகாவிடம் தகாதமுறையில் நடந்தார்.

அப்போது தான் சிறுமி ரித்திகா  பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவளது உடலை வீட்டி லேயே ராஜேசும் ரேவதியும் மறைத்து வைத்து விட்டு அன்று இரவு குப்பை மேட்டில் வீசி உள்ளனர்.

போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது. இதனை யடுத்து ராஜேசையும் ரேவதியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரித்திகா அணிந்திஇருந்த  நகைகளை எண்ணூர் ராம கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு அடகு கடையில் இருவரும் ரூ. 2200 க்கு அடகு வைத்தது தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். கைது செய்யப் பட்ட ரேவதியும் ,ராஜேசும்  கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நகைக்காக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

இது தொடர்பாக ராஜேஷ் , ரேவதி இருவர் மீதும் கடுமையான சட்டபிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பூந்தமல்லியை அடுத்த மதானந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினி செக்ஸ் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Next Story