அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து வருகிறது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து வருகிறது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2017 10:30 PM GMT (Updated: 22 Feb 2017 7:12 PM GMT)

அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டமும் வருவது குறைந்து உள்ளது

சென்னை

அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டமும் வருவது குறைந்து உள்ளது. எனவே உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அம்மா உணவகங்கள்

சென்னை மாநகரில் வாழும் ஏழை-எளிய மக்கள் வயிறார சாப்பிடும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகங்கள்’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கப்பட்டன.

பொதுமக்களின் அமோக வரவேற்பினை தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, கஸ்தூரிபா அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரி, அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிற மாநகராட்சிகளிலும், அரசு ஆஸ்பத்திரி வளாகங்களிலும் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ரூ.13 லட்சம் விற்பனை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் 7 அம்மா உணவகங்களும் உள்ளன. நுங்கம்பாக்கத்தில் (மண்டலம்-9) அதிகபட்சமாக 38 அம்மா உணவகங்கள் அமைந்துள்ளன.

தினமும் சராசரியாக 3 லட்சம் இட்லிகளும், 29 ஆயிரம் பொங்கல்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலவை சாதங்களும், 2 லட்சம் சப்பாத்திகளும் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அமுதம் கூட்டுறவு அங்காடிகள் மூலமும், காய்கறிகள் திருவல்லிக்கேணி கூட்டுறவு பண்டக சாலையில் இருந்தும் பெறப்பட்டு வருகின்றன. தினமும் ரூ.13 லட்சம் அளவில் அம்மா உணவகங்கள் மூலம் சாப்பாடு விற்பனை ஆகிறது.

பொதுமக்கள் புகார்

மக்களின் பேராதரவோடு செயல்பட்டு வந்த அம்மா உணவகங்களின் செயல்பாட்டை சென்னை மாநகராட்சி நேரடியாக கவனித்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அம்மா உணவகங்களில் வினியோகிக்கப்படும் சாப்பாட்டின் தரம் குறைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சப்பாத்தி மோசம்

ஏழை-எளிய மக்கள் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் அம்மா உணவகங்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஜெயலலிதா இருந்தவரையில் அதிகாரிகள் பரபரப்பாக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். உணவு தரமாகவும், சுகாதாரமானதாகவும், சுவை கொண்டதாகவும் இருந்து வந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்தபின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உணவின் தரமும், சுவையும் குறைந்து விட்டன. குறிப்பாக இரவு நேரத்தில் வினியோகிக்கப்படும் சப்பாத்தியும், பருப்பு கரைசலும் மிகவும் மோசமாக இருக்கிறது. பருப்பு கரைசல் வெறும் தண்ணீராகவே உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சிக்கு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பலனில்லை. விலை மலிவு என்ற பெயரில் உணவின் தரம்-சுவை பாதித்தால், அம்மா உணவகம் செல்வதில் பயனே இல்லை. இதனால் வழக்கமான கூட்டம் தற்போது காணப்படுவது கிடையாது. அது தான் உண்மை. எனவே இனியும் தாமதிக்காமல் அம்மா உணவகங்களில் தரமான சாப்பாடு கிடைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புயல் சேதம்

சென்னை எழும்பூர் வரதராஜபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டு உள்ளது. ‘வார்தா’ புயலின் போது இந்த அம்மா உணவகத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஆனால் பராமரிப்பு பணி முடங்கி அம்மா உணவகமும் மூடப்பட்டு விட்டது.

எனவே இந்த அம்மா உணவகத்தை மீண்டும் செயல்பட வைப்பதற்காக நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘கையேந்தி பவன்’

அதேநேரத்தில் தள்ளுவண்டி கடைகளிலும், ‘கையேந்தி பவன்’ எனப்படும் சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை வெகுவாகவே அதிகரித்து இருக்கிறது. இந்த கடைகளில் கிடைக்கும் உணவு தரமாக, சுவையாக இருப்பதாகவும், குறைந்த விலையிலேயே உணவுகள் கிடைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். 

Next Story