சென்னையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


சென்னையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2017 9:15 PM GMT (Updated: 22 Feb 2017 7:39 PM GMT)

சென்னை ஆதம்பாக்கம், தங்கசாலை, ஆர்.கே.நகரில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

ஆதம்பாக்கம்

சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நடிகர் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகரும், பின்னணி பாடகருமான மாணிக்்க விநாயகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம், தென்சென்னை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஆலந்தூர் பகுதி காங்கிரஸ் தலைவர் நாஞ்சில்பிரசாத் உள்பட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “நான் அரசியலில் குதித்துவிட்டதாக கூறுவார்கள். பிறந்ததில் இருந்தே நான் தி.மு.க. தான். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை பொதுமக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். சட்டமன்றத்தில் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி 89 எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியும். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தி.மு.க. அழிவு பாதையை நோக்கி செல்கிறது. விரைவில் அழிந்துவிடும் என அரசியல் ஞானி ஒருவர் கூறி வருகிறார். ஆயிரம் அரசியல் ஞானிகள் வந்தாலும் தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

தங்கசாலை

துறைமுகம் தொகுதி தி.மு.க. சார்பில், சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜே.எம்.ஆரூண், பெரியார் திராவிடர் கழக தலைவர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வடசென்னை மாவட்ட செயலாளர் சுதர்சனம் தலைமை தாங்கினார்.

இதில் தி.மு.க. மாநில மீனவரணி செயலாளர் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., மாநில மீனவர் அணி துணை செயலாளர் மதிவாணன், தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், காங்கிரஸ் கட்சி சார்பில் ராயபுரம் மனோ உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story